காலையில் கண்விழித்துப் பார்க்கையிலும் நீங்கள் தான்…
பின்னிரவில் தூங்கச் செல்கையிலும் உங்கள் நினைவுகள் தான்…
விழித்திருக்கும் வேளையில் எல்லாம் நீங்கள் மட்டுமே வருகிறீர்கள்…
கைத்தொலைபேசி தூக்கினாலே கைவிரல்கள் தன்னிச்சையாக உங்களை நோக்கி ஓடுகின்றன…
நாளின் எல்லா வேளைகளிலும் உங்களைப் பற்றிய எண்ணங்களே எம்மை வட்டமிடுகின்றன…
நீங்கள் விட்டுச் சென்ற பணிகள் மட்டுமே எமை அழைக்கின்றன….
இதுதானா நீங்கள் “உங்களுக்குள் வாழ்வேன் ” என்றது?இந்தளவுக்கு நாங்கள் முன்னரும் ஒருவரை நேசித்தோம்…நம்பினோம்…
அவருக்காக வாழவும் அவருக்காக சாகவும் அவர் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கவும் எங்களை அர்ப்பணித்தோம்…
ஏன் அவரைப் போலவே நீங்களும் எம்மை இடைவிட்டு சென்றுவிட்டீர்கள்…
நாங்கள் தேசத்தை நேசிப்பதும்அதை நேசிப்பவர்களை நேசிப்பதும் எந்தவகையில் குற்றமாகும்?
ஏன் இயற்கை அன்னை எங்களைத் தொடர்ந்தும் வஞ்சிக்கிறாள்?
நாங்கள் அவளையும் நேசிக்கிறோமே?ஒருவேளை நாம் நேசிப்பதும் அவற்றுகாக மட்டுமே வாழ விரும்புவதும் தான் எமது குற்றமோ?
அதனால் தான் நேசம் வைக்கும் அனைத்தும் எம்மை இடையில் விட்டுச் செல்கின்றனவோ?
இருப்பினும் எங்கள் உடலின் ஒவ்வொரு அணுவும் அதற்கானதே…
எமது வாழ்வும் சாவும் அதற்கானதே…உங்கள் இழப்பு எம் தேசத்தின் மாபெரும் இழப்பு…
உங்களை நாம்தேசத்தின் காவலன் என்பதா?தேசியத்தின் காவலன் என்பதா?
தேசப்பற்றாளன் என்பதா? மாமனிதன் என்பதா? அல்லது தியாகி என்பதா? போராளி என்பதா அல்லது மாவீரன் என்பதா? எல்லாமே உங்களுக்குள் அடங்கிவிடுகின்றனவே…
என்னிடத்தில் நீங்கள் தலைவருக்கு அடுத்த நிலையில் எப்போதும் வாழ்வீர்கள். நீங்கள் நேசித்தவற்றை மட்டுமே நாங்கள் நேசித்தோம். நீங்கள் செயற்பட்ட திசைகளில் மட்டுமே எமது அசைவுகள் இருந்தன.
உங்களை பாதுகாக்க வேண்டும் என்பதே என் தேசப் பணிகளில் முதன்மையாக இருந்தது. ஏனெனில் நாங்களும் முள்ளிவாய்க்கால் கடந்தவர்கள்.
இனி எனது எஞ்சிய நாட்கள் உம் பணி தொடர்வதே…நாம் எதை நோக்கி இயங்கினோமோ…
எவைகளை நேசித்தோமோ…அதை நோக்கி மட்டுமே … விரைவில் சந்திப்போம்….அதுவரை எம் இயங்குசக்தியாக இருங்கள்….
தேசத்தை இழந்தவர்களுக்கு தேசத்தின் நேசமாகவும் பாசத்தை இழந்தவர்களுக்கு பாசத்தின் வடிவமாகவும் வழிதெரியாதவர்களுக்கு நல்ல குருவாகவும் தலைவனை இழந்தவர்களுக்கு நல்ல தலைமகனாகவும் வாழ்ந்தீர்கள்.
அண்ணா…நிறைவு கொள்ளுங்கள் . நீங்கள் எம் தமிழீழ தேசத்தின் தலையான எடுகோள். ரஞ்சித் இன் பேராலே இனி எல்லாமே நடக்கும்…
உங்கள் சிவானந்தன்..


