புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஆரம்பம்!

புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஆரம்பம்!

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஜூன் 14ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இணையவழி  நுழைவு நிறுத்தப்படும் என்றும், விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி திகதி எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.

அரசாங்க பாடசாலைகள் அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளில் ஐந்தாம் வகுப்பில் கற்கும் மாணவர்கள் மாத்திரமே புலமைப்பரிசில் பரீட்சையில் பங்கேற்க முடியும் என்பதோடு, 31 ஜனவரி 2025 அன்று 11 வயதுக்குட்பட்ட குறைந்த வருமானம் கொண்ட மாணவர்கள் மட்டுமே உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள் ஆகும்.

onlineexams.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் சிக்கல்கள் இருப்பின், பரீட்சை திணைக்களத்தின் அவசர இலக்கமான 1911 அல்லது 011-2784 537, 011-2786 616, 011-2784 208 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

இந்த ஆண்டு, 5ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.