பிரான்சில் வரலாறு காணாத சேதங்களை ஏற்படுத்தியுள்ள மழை!

பிரான்சில் வரலாறு காணாத சேதங்களை ஏற்படுத்தியுள்ள மழை!

மத்திய பிரான்சில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை, கடந்த 40 ஆண்டுகளில் முதன் முறையாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் மிச்செல் பார்னியர் (Michel Barnier) தெரிவித்துள்ளார்.

பிரான்சின் அருத்தேச் மற்றும் லோசேரே ஆகிய பகுதிகளில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் 700 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக பிரான்சின் வானிலை நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், இந்த இரண்டு நகரங்களுக்கிடையிலான முக்கிய நெடுஞ்சாலை வெள்ளத்தில் மூழ்கியதால், அது இன்றும் (18.10.2024) மூடப்பட்டிருந்தது.

மழையினால் பாதிக்கப்பட்ட 2,300 நபர்களுக்கான மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெள்ளம் ஏற்பட்ட போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் தற்போது வீடு திரும்பியுள்ளனர்.

எனினும், வரும் நாட்களில் பாதிப்பு அதிகமாகலாம் என்பதால் தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்படலாம் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கையை வானிலை நிறுவனம் திரும்ப பெற்றிருந்தாலும், தென்மேற்கு பிரான்சில் இன்னும் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.