காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் உரியநீதி வேண்டும் - ரவிகரன்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் முன்னைய இனவாத அரசுகள் செயற்பட்டதைப்போல தற்போதைய அரசும் செயற்படாது, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு உரிய நீதியை வழங்க புதிய அரசு முன்வர வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் நேற்று(31) இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத்தினர், தொடர் போராட்டத்தின் 3007ஆவது நாளில் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் இராணுவத்திடம் கையளித்த உறவுகளை, மீளக் கையளிக்குமாறு அவர்களின் உறவுகள் தொடர்சியாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். எனவும்,
குறிப்பாக எமது உறவுகள் வட்டுவாகல் பகுதியிலும் , முகாம்களிலும், கடலிலும் கைதுசெய்யப்பட்டதுடன் வெள்ளைவானிலும் கடத்தப்பட்டனர் இவ்வாறாக பலவழிகளிலும் எமது உறவுகளுக்கு கடந்தகால அரசுகள் துன்பங்களை விளைவித்தன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இவ்வாறு கையளிக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீளக்கையளிக்குமாறு கோரும் அவர்களது உறவுகளை அரசாங்கங்கள் தொடர்ந்து ஏமாற்றிவருகின்றன. இந்த நிலை மாறவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
கடந்தகால அரசாங்கங்கள்தான் இவ்வாறு ஏமாற்றினார்களெனப் பார்த்தால் தற்போது ஆட்சிப்பொறுப்பிலுள்ள அரசாங்கம் கூட இதுதொடர்பில் கவனம்செலுத்துவதாகத் தெரியவில்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் எட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகமகவை சந்தித்தபோதுகூட காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி வழங்கப்படவேண்டுமென கோரிக்கை முன்வைத்தோம். இருப்பினும் இதுவரை சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும்
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் புதிய அரசாங்கமும் கடந்த அரசாங்கம் செயற்பட்டதைப்போன்று செயற்படாமல் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான உரிய நீதியை வழங்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.