இலங்கையின் நிலப்பரப்பில் 70 சதவீதம் இரத்தினக் கற்கள் படிந்துள்ளதாக மதிப்பீடு!

இலங்கையின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு (70 சதவீதம்) இரத்தினக் கற்கள் படிந்துள்ளதாக தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையம் மதிப்பிடுகிறது.

அத்துடன், உலகில் காணப்படும் 200 வகையான இரத்தினக் கற்களில் 70 வகையான இரத்தினக் கற்கள் இலங்கையில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

கண்டுபிடிக்கப்படாத இரத்தினக் கற்களை அடையாளம் காண புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆராய்ச்சி நடத்த தேசிய ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு, இந்த திட்டத்தின் கீழ் இங்கிரிய, தெஹியோவிட்ட, அயகம மற்றும் பெல்மதுல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள அடிப்படை இரத்தினங்களை வரைபடமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்துடன், மாத்தளை, பதுளை, பொலன்னறுவை, மாத்தறை, காலி, களுத்துறை மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலத்தடி இரத்தினக்கல் படிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும், இரத்தினக்கல் அகழ்விற்கான வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2024ஆம் ஆண்டில், நகைகள், வைரங்கள் மற்றும் இரத்தினக் கற்கள் ஏற்றுமதி மூலம் 355 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டது.

2025 ஆம் ஆண்டிலும் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.