பணிப்புறக்கணிப்பால் மருந்து - ஆய்வக சேவைகளில் பெரும் பாதிப்பு

பதவி உயர்வில் காலதாமதம், சுகாதார பட்டதாரிகளை சேவைக்கு இணைத்துக்கொள்ளவதில் நிலவும் பிரச்சினை உள்ளிட்ட 05 விடயங்களை முன்வைத்து, நிறைவுகாண் மருத்தவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தின் மருந்தாளர்கள் சேவை, இராசாயன ஆய்வுக்கூட சேவை உள்ளிட்ட 05 சேவைப்பிரிவினர் நேற்று (05) காலை 08 மணிமுதல் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த பணிப்புறக்கணிப்பால் மருந்து விநியோகப் பிரிவு, மருந்து பகிர்ந்தளித்தல் பிரிவு, இரசாயன ஆய்வுகூட பரிசோதனை பிரிவு நேற்று முழுமையாக முடங்கியதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதனால் நோயாளர்கள் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
24 மணிநேரம் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த இந்த பணிப்புறக்கணிப்பால் கொழும்பு தேசிய வைத்தியசாலை, தேசிய கண் வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை உள்ளிட்ட நாடு முழுவதுமுள்ள வைத்தியசாலைகளின் மருந்து விநியோகம், இரசாயன ஆய்வுகூட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தன. இருந்தபோதும் வைத்தியசாலைகளில் அவசர சேவைப்பிரிவுகள் இயங்கியதாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சேவைப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 27 ஆம் திகதி அடையாள பணிப்புறக் கணிப்பை மேற்கொண்டிருந்தனர். அதனால் நோயாளர்கள் பாதிப்பை சந்தித்திருந்தனர். இந்நிலையில் அப்போது வெளிநாடு சென்றிருந்த கசுகாதார அமைச்சர் நாடு திரும்பியதன் பின்னர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவித்ததால் பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுத்திருந்தார்கள். இருந்தபோதும் வாக்குறுதிக்கமைய இதுவரையில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பேச்சுவார்த்தைக்கு அழைக்காமையின் காரணமாக மீண்டும் இந்த ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்ததாக அந்த ஒன்றியம் அறிவித்துள்ளது.
பணிப்புறக்கணிப்பு செய்ய நேர்ந்ததை முன்னிட்டு சுகாதார தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் எங்களின் கவலையை தெரிவித்துக் கொள்கிறோம். இருந்தபோதும் சுகாதார அமைச்சு பதிலாளிக்காமை என்ற காரணத்தின் அடிப்படையில் மீண்டும் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் சானக்க தர்மவிக்கிரம தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
புற்றுநோய் வைத்தியசாலை, மகளிர் மற்றும் சிறுவர் வைத்தியசாலை உள்ளிட்ட விசேட வைத்தியசாலைகளை இந்த சுகாதார நடவடிக்கையில் இணைத்துக்கொள்ளவில்லை. அவசர பரிசோதனைகளுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்த வில்லை. இருந்தபோதும் துரதிர்ஷ்ட வசமாக இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள நேர்ந்தது. இந்த நிலைமைக்கு மக்களிடம் மன்னிப்புக் கோருகிறோம். சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் இதற்காக பொறுப்பை ஏற்க வேண்டும்.
புதிய தலைமுறையினருக்க தொழில்வாய்ப்பு கிடைப்பதற்கு இடையூறு ஏற்படுத்த வில்லை. ஆனால், புதிய சேவை இணைப்புகளின் போது அரச பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும். சுகாதார சேவையிலுள்ள வைத்திய சேவை, பல்சிகிச்சை வைத்திய சேவைகளுக்கும் இவ்வாறே சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அத்தோடு பரீட்சையின்போது நுண்ணறிவு கேள்விப் பரீட்சைக்கு பதிலாக சேவைக்கு அவசியமான கேள்வி பரீட்சையினூடாக சேவைக்கு அவசியமான பட்டதாரியை அல்லது ஊழியரை பெற்றுக்கொள்ள வேண்டும். அதனூடாகவே அனுபவம் கொண்டு தொழில்சார் திறமை அனுபவத்தை அறிந்துகொள்ள முடியும். இதற்கு அப்பால் நுண்ணறிவு கேள்விப் பரீட்சையினால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகொடுக்க முடியும்.
ஆனால், எங்களின் கோரிக்கைகள் தொடர்பில் அமைச்சு எந்த அக்கறையும் செலுத்துவதில்லை. புறக்கணித்து வருகிறார்கள். எனவே, இந்த பிரச்சினைக்கான முழு பொறுப்பையும் அமைச்சே ஏற்றுக்கொள்ள வேண்டும். குறைந்தது பேச்சுவார்த்தைக்கு கூட முன்வர வில்லை என்றால் தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டியது தொழிற்சங்கங்களின் பொறுப்பாகும்.அந்தப் பொறுப்பையே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்றார்.