மொட்டுக் கட்சியின் 72 பேர் ரணில் பக்கம்!

மொட்டுக் கட்சியின் 72 பேர் ரணில் பக்கம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டமாபய ராஜபக்சவிடம் இருந்து ரணிலுக்கு ஒரே ஒரு அழைப்புதான விடுக்கப்பட்டது. அவர் உடனேயே நாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டு நாட்டை மீட்டெடுத்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நான் எனது அரசியல் வாழ்வில் ஒருபோதும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இருக்கவில்லை. கடந்த முறை எமது தாய் கட்சியான சுதந்திர கட்சியின் மேடையில் கூட ஏறவில்லை. ஆனால் இம்முறை மாறுபட்ட நிலைமையே காணப்படுகிறது.

பொதுஜன பெரமுனவின் 72 உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இருக்கின்றனர். எதிர்கட்சிகளின் தலைவர்கள் சஜித்தின் மேடையில் ஏறும்போதும், அவர்களின் கட்சி உறுப்பினர்கள் கூட்டாக வந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோடு இணைந்து கொள்கிறார்கள்.

2022 ஆம் ஆண்டில் மக்கள் வாழ்க்கைச் சவால்களை எதிர்கொண்ட வேளையில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சஜித்துக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அனுரவும் சவாலை ஏற்கவில்லை. ரணிலுக்கு ஒரேயொரு அழைப்புதான் விடுக்கப்பட்டது. நாட்டை ஏற்று, நாட்டை மீட்டெடுத்துத் தந்தார்.

அன்று நாட்டின் மத்திய வங்கியில் கூட பணமிருக்கவில்லை. 14 மணித்தியாலம் மின் வெட்டு காணப்பட்டது. அப்போது நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க துணிச்சலான பல தீர்மானங்களை எடுத்தார்.

மக்களை ஏமாற்ற இலசவமாக நிவாரணங்களை வழங்காமல் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தேவையான பணிகளைச் செய்தார். அதனால் அதனால் அவர் நாட்டை தொங்கு பாலத்திலிருந்து காப்பாற்றி நீண்ட தூரம் கொண்டு வந்துவிட்டார். இந்த தேர்தலில் அவரின் பாதையை மாற்றினால் நாடு பெரும் பாதகத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.