அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்த கனடா
குறிப்பிட்ட சில அமெரிக்க பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைக்கு கனடா பதிலடி கொடுக்கும் வகையில் 155 பில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
முதல் சுற்றாக 30 பில்லியன் கனேடிய டொலர் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பானது செவ்வாய்கிழமை முதல் அமுல்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து மூன்று வாரங்களில் 125 பில்லியன் கனேடிய டொலர் மதிப்புள்ள பொருட்கள் மீது இந்த புதிய வரி விதிப்பு அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
"நிச்சையமாக நாங்கள் அதிகரிக்க நினைக்கவில்லை. ஆனால் நாங்கள் கனடாவுக்காகவும் கனடா மக்களின் வேலைவாய்ப்புக்காகவும் துணை நிற்கிறோம்" என்று தெரிவித்தார்.
இந்த புதிய வரி விதிப்பானது அன்றாடப் பொருட்களான, அமெரிக்க பீர், வையின், பழங்கள், காய்கறிகள், நுகர்வோர் சாதனங்கள், மரக்கட்டை, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களுக்கு பொருந்தும் என்று மேலும் அவர் கூறினார்.
கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரியும் விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சில மணி நேரங்களுக்குப் பிறகு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த புதிய வரி விதிப்பை அறிவித்தார்.