காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பானது இன்று (28) மதியம் 12.30 மணி முதல் நாளை (29) மதியம் 12.30 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் காரணமாக, சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளுக்கு காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும். இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுத்தப்பட்டுள்ளது.

சிலநேரங்களில், சிலாபம் முதல் கொழும்பு வழியாக காலி வரையிலும், காங்கேசன்துறை முதல் முல்லைத்தீவு வழியாக திருகோணமலை வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளுக்கு காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் எனவும், இந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாகக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், மன்னார் முதல் புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.5 - 3.0 மீற்றர் வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.