சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கெஹெலிய, மனைவி மற்றும் மகள்!

பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இடம்பெற்றுவரும் விசாரணைக்கு அமைவாக, கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இன்று (18) உத்தரவிட்டார்.
அதன்படி, சந்தேக நபர்கள் ஒவ்வொருவரும் தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேக நபர்களுக்கு வௌிநாட்டு பயணத்தடை உத்தரவையும் பிறப்பித்தார்.
இந்த வழக்கு நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் விசாரணைக்கு வந்தது, அங்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்தனர். இந்த சந்தேக நபர்கள் 97.35 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமாகப் பெற்றமை தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணைக்கு அமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டனர்.
குறித்த சந்தேக நபர்களின் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்து இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு தகவல் அளித்ததாகவும், அதன்படி, இந்த விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி, இந்த வழக்கின் இரண்டாவது சந்தேக நபரான முன்னாள் அமைச்சரின் மனைவிக்கும், மூன்றாவது சந்தேக நபரான மகளுக்கும் சொந்தமான தலா 30 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு நிலையான வைப்பு கணக்குகள் விசாரணைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களுக்குச் சொந்தமான ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், இந்த சந்தேக நபர்களுக்குச் சொந்தமான 150 இலட்சம் ரூபா வைப்பிலிடப்பட்ட மூன்று வங்கிக் கணக்குகள் வேறு நபர்களின் பெயர்களில் வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்வைக்கப்பட்ட அனைத்து சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதவான், சந்தேக நபர்களை பிணையில் விடுவித்து உத்தரவிட்டார். இந்த வழக்கு ஓகஸ்ட் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் நீதவான் அறிவித்தார்.
எவ்வாறாயினும், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி குசும் பிரியதர்ஷினி மற்றும் மகள் சந்துல ரமாலி ரம்புக்வெல்ல ஆகியோர் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.