கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தடுப்பூசி செலுத்திய நபர் மரணம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தடுப்பூசி செலுத்திய நபர் மரணம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் தடுப்பூசி செலுத்திய பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 17ம் அறையில் தீக்காயங்களுக்குள்ளாகிய நோயாளி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு Cefuroxime என்ற தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தடுப்பூசி போடப்பட்ட நிலையில் அந்த நபர் உயிரிழந்ததாகவும் அவர் 31 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குமார விக்கிரமசிங்கவிடம் வினவிய போது, குறித்த நபரின் மரணம் தொடர்பில் ஏற்கனவே விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோய் எதிர்ப்பு தடுப்பூசியை செலுத்தியதால் மரணம் நிகழ்ந்ததா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பதை கண்டறிய முடியும் என மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், உயிரிழந்த நோயாளிக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் ஊசிகள் ஏற்கனவே பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் குமார விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.