உப்பு சப்பில்லாத சர்வகட்சி மாநாடு : ரணிலின் நிலைப்பாடை ஏற்க முடியாது - சுமந்திரன் சாடல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சர்வகட்சி மாநாடு எந்தவித பயன்பாட்டுடனும் இருக்காது என்ற சந்தேகத்துடனேயே  வந்தோம்.  நாங்கள் நினைத்தது போன்றே உப்பு சப்பில்லாமல் இடைநடுவில் நிறைவடைந்து விட்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்..

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (26) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் எங்களை இரண்டில் ஒன்றை தெரிவு செய்யச் சொல்கிறார்.  

ஒன்று மாகாண சபைத் தேர்தலை நடத்த  இணங்க வேண்டும். 

இரண்டு 13 வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் குறித்து பேச வேண்டும்.

இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாது என்பது தான் அவரின் நிலைப்பாடாக இருக்கின்றது.

மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமாயின் அதன் அதிகாரங்கள் குறித்து ஏன் கலந்துரையாட முடியாது என்று எங்களுக்கு புரியவில்லை.

எனவே, குறித்த மாநாட்டை நிறுத்துவதற்கு நாங்கள் முடிவு செய்தோம்.  மாநாட்டின் ஊடாக எந்த பிரதிபலனும் கிடைக்கவில்லை.

நாங்கள் சந்தேகத்துடன் வந்தது போன்றே இங்கு இடம்பெற்றது.

தேர்தல் குறித்து கதைக்கும் போது ஜனாதிபதி அச்சத்துடனேயே இருப்பது எங்களுக்கு தெரியவந்தது.

இன்றைய கலந்துரையாடல் முற்றிலும் அதிருப்தியாகவே அமைந்தது” என்று  எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.