யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்

யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகள் சர்வதேச கண்காணிப்புடன் சர்வதேச நியமங்களைப் பின்பற்றியும் மேற்கொள்ளப்படவேண்டும்” என வலியுறுத்தி இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் செம்மணி வரவேற்பு வளைவுக்கு அருகில் இக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழர் தாயகத்தில் காலத்துக்குக் காலம் பல்வேறு மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றுக்கான நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டதா? என்று கேட்டால் அதற்கு ‘இல்லை’ என்பதுதான் பதிலாகவுள்ளது.

எனவே. இதுவரை அவதானிக்கப்பட்ட புதைகுழிகளுக்கு நீதிகோரியும்,செம்மணிப் புதைகுழியில் சர்வதேச கண்காணிப்பைக் கோரியும், காணாமலாக்கப்பட்டோருக்கான சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களை அகழ்வுப் பணிகளை பார்வையிட அனுமதிக்குமாறு வலியுறுத்தியும் செம்மணி வளைவுக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.