இலங்கை கடற்பகுதியில் இந்திய மீனவர்களுக்கான அனுமதி நிராகரிப்பு - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு...

இலங்கை கடற்பகுதியில் இந்திய மீனவர்களுக்கான அனுமதி நிராகரிப்பு  -  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு...

இலங்கை கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு இந்தியர்களுக்கு அனுமதி வழங்குமாறு தமிழக அரசாங்கம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஸ்ணனிடம் தொலைபேசியில் உரையாடலின்போது இந்த விடயத்தை தாம் நிராகரித்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
இந்த தொலைபேசி உரையாடலின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை, குறிப்பிட்ட காலத்திற்கு இலங்கை கடற்பகுதியில் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு, தமிழக கடற்றொழில் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் இந்திய கடற்றொழிலாளர்கள்; இலங்கைக் கடலுக்குள் வரமாட்டார்கள் என தமிழக அரசு உறுதியளித்த பின்னரே மீன்பிடி விவகாரம் குறித்து விவாதிக்க முடியும் என்று தாம் கூறியதாக டக்ஸள் தேவானந்தா தெரிவித்துள்ளார்

இதேவேளை இந்திய-இலங்கை மீன்பிடி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான கோரிக்கைக்கு இந்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் 2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் இலங்கைக் கடலுக்குள் நுழைந்ததற்காக 88 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 12 படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடதக்கது.