தனியார் பேருந்துக்கு “C” தர சான்றிதல் - கையூட்டல் பெற்ற அதிகாரிகளுக்கு சிறை!

தனியார் பேருந்துக்கு “C” தர சான்றிதல் - கையூட்டல் பெற்ற அதிகாரிகளுக்கு சிறை!

பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படும் தனியார் பேருந்து ஒன்றுக்கு “C” தரத்திலான அனுமதி பத்திரம் வழங்க 50,000 ரூபாய் கையூட்டல் பெற்ற அதிகாரிகள் இருவரை மார்ச் மாதம் (04) ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி பிரபுதிகா லங்காதினி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மத்திய மாகாண பொது போக்குவரத்து திணைக்களத்தை சேர்ந்த நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான மாவட்ட முகாமையாளர் மற்றும் மேலும் ஒரு அதிகாரியை கொழும்பிலிருந்து சென்ற கையூட்டல் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் நேற்று மதியம் நுவரெலியாவில் வைத்து கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு அதிகாரிகளையும் நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதியிடம் கையூட்டல் மற்றும் மோசடி தவிர்ப்பு திணைக்கள அதிகாரிகள் முன்னிலைப்படுத்தினர்.

இதன் போது விசாரணையை மேற்கொண்ட நீதிபதி சந்தேக நபர்களான இரு அதிகாரிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அதேநேரத்தில் சந்தேக நபர்களின் சார்பில் முன்னியைான சட்டத்தரணி சந்தேக நபர்களில் ஒருவரான மாவட்ட முகாமையாளருக்கு சக்கரை நோய் மற்றும் இதய நோய் இருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதனை கருத்திற் கொண்டு குறித்த சந்தேக நபரை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு நிதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் இவர்கள் தொடர்பான வழக்கை 04ஆம் திகதி வரை ஒத்தி வைத்த நீதிபதி அன்றைய தினத்தில் சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது