எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்திடம் கோரிக்கை
பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தூண்களில் ஒன்றான பொலிஸ் துறையும், நீதித்துறையும் இன்று ஆபத்தான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளன.
சந்தேக நபர்களை நீதிமன்ற அறையில் கொலை செய்கின்றனர். நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் மீது காணப்படும் அச்சம் பயம் மரியாதை முற்றாக இல்லாது போயுள்ளன. நீதிமன்ற அறையில் துப்பாக்கிச் சூடு நடத்தும்போது நீதிபதிகளுக்கு ஏற்படும் அதிர்ச்சியை சொல்லி முடிக்க முடியாது. இனியும் இவ்வாறானதொரு நிலை ஏற்படாது என்பதற்கு அரசாங்கம் என்ன உத்தரவாதத்தை நாட்டுக்கும் மக்களுக்கும் நீதிபதிகளுக்கும் வழங்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.
நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இடம்பெற்று வரும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இன்று (14) பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இத்தருணத்திலும் கூட நீதிமன்றத்தில் கொலையை திட்டமிட்ட பெண்ணும், முன்னால் பொலிஸ் மா அதிபரும் நீதிமன்ற பிடியாணையில் இருந்து தப்பிக்க தலைமறைவாகியுள்ளனர். பொலிஸாரால் கூட முன்னாள் பொலிஸ்மா அதிபரைக் கண்டுபிடிக்க முடியாதுபோயுள்ளது. ஒட்டுமொத்த நாட்டின் பொது மக்கள் பாதுகாப்பும் சீர்குலைந்துள்ளது. நேற்று (13) பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். கம்பஹா வெலிவேரிய பகுதிகளில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. அகுனுகொலபலஸ்ஸ பகுதியில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மீகஹகிவுல, தல்தென, மூதூர் போன்ற பிரதேசங்களிலும் கொலைகள் இடம்பெற்று வருகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இத்தகைய பின்னனியில், பொதுமக்களின் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளது. இதை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். வீதிகளில் கொலை, வன்முறை, மற்றும் பயங்கரவாதம் என முழு சமூகத்திலும் பயங்கரம் ஆட்கொண்டுள்ளது.
இவற்றை கட்டுப்படுத்த, யாரிடமாவது டியூஷன் எடுத்து இந்த கொலை அலையை தடுக்க அரசங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
???? முன்னாள் பொலிஸ் மா அதிபரைக் கூட கைது செய்ய முடியாமல் போயிருக்கிறது. சட்டத்தின் ஆட்சி குறித்து பேசி என்ன பயன்?
ஓய்வு பெற்ற பிறகும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கப்படுகின்றன. இது இவ்வாறு தொடர்ந்தால் இவர்கள் எவ்வாறு தமது அரச பணியை முன்னெடுப்பது. இங்கு பிரச்சினை காணப்படுகின்றது.
இந்த கொலை செய்யும் கலாச்சாரத்தை நிறுத்த தேசிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு எதிர்க்கட்சியினர் ஒட்டுமொத்த ஆதரவையும் நல்குவர்.
முன்னாள் பொலிஸ் மா அதிபரை கண்டுபிடிக்க முடியாவிட்டால் சட்டத்தின் ஆட்சியை எவ்வாறு கோலோச்சுவது? எனவே இதனை வேடிக்கையாக எடுத்துக் கொள்ளாமல் தீர்வுகளை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
நாட்டின் தேசிய பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைக்க சபை அமர்வுகள் ஆரம்பிக்கும் நேரத்தில், பாராளுமன்ற சம்பிரதாயங்களின் பிரகாரம் எதிர்க்கட்சித் தலைவருக்கு இருந்த வாய்ப்பை தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்து வருகிறது.
ஆகையால் தான் வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்திக்கு மத்தியில் இவ்வாறு இந்த விடயத்தை சபையில் முன்வைக்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.