முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அத்தாட்சி அலுவலர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார்.

வன்னி தேர்தல் தொகுதியின் முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

வாக்காளர் டாப்பின் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதோடு 18 வயதை பூர்த்தி செய்த 404 பேர் குறை நிரப்பு பட்டியல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற இருக்கின்றது. 

வாக்காளர் அட்டைகள் நேற்றையதினம் தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. 

இன்றைய தினம் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. 

எதிர்வரும் 8 திகதி விசேட விநியோகத்திற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

நாளையதினம் ஆரம்பிக்க இருக்கின்ற தபால் மூல வாக்களிப்பிற்காக 3561 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளார்கள். 

நாளையதினம் மாவட்ட செயலகத்திலும், மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற இருக்கின்றது.

அதேபோல் 4, 6 திகதிகளில் மாவட்டத்திலுள்ள பொலிஸ் திணைக்களங்களிலும் ஏனைய அரச நிறுவனங்களில் 5,6 திகதிகளிலும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற இருக்கின்றது. 

இத்தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 11, 12 ஆகிய தினங்களில் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வாக்களிக்க முடியும். 

முல்லை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணி முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தல் கடமையில் ஈடுபடுகின்ற அலுவலர்களுக்கான பயிற்சிகளும், கலந்துரையாடல்களும் நடைபெற்று இருக்கின்றது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1300 விசேட தேவையுடையவர்களுக்கு விஷேட வசதிகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரையில் 5 முறைப்பாடுகள் மட்டுமே கிடைக்கப் பெற்றிருக்கிறது. 

இவை சட்ட மீறல்களாகவே இருக்கின்றன. 

தேர்தல் தொடர்பான எந்தவித வன்முறையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறவில்லை. 

தேர்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் 0212290016 என்ற இலக்கத்திற்கு தொடர்ப்பு கொண்டு தெரிவிக்க முடியும் என மேலும் தெரிவித்தார். 

முல்லை கதிர்

சர்வதேச ஊடகவியலாளர்