துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு 10 வயது சிறுமி கொலை! (Update)

துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு 10 வயது சிறுமி கொலை! (Update)

தலைமன்னார் வடக்கு பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மேலும், அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (17) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி தென்னந்தோப்பொன்றில் இருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் தென்னந்தோப்பில் பணியாற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை - குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை 72 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி கோரப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய மன்னார் நீதவான் முன்னிலையில் குறித்த சந்தேகநபர் பிரசன்னப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேற்று முன்தினம் இரவு முதல் குறித்த சிறுமி காணாமல் போயிருந்ததாக அவரது பாட்டி பொலிஸாரிடம் முறைப்பாடளித்திருந்தார்.

இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சிறுமியின் சடலம் அருகிலுள்ள தென்னந்தோப்பு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டது.

சிறுமியின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் தொழில் நிமித்தம் புத்தளம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில் சிறுமியும் அவரது சகோதரர்களும் தங்களது பாட்டியுடன் தலைமன்னாரில் வாழ்ந்து வருகின்றனர்.

சிறுமியின் சடலத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளமையினால் அவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டது.

இந்தநிலையில், சட்ட வைத்திய அதிகாரிகள் முன்னிலையில் இடம்பெற்ற வைத்திய பரிசோதனையின் போதே அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.