இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்து ஐ.நா வெளியிட்ட புதிய அறிக்கை!

இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்து ஐ.நா வெளியிட்ட புதிய அறிக்கை!

இலங்கையின் அடிப்படை சுதந்திரத்திற்கு மேலும் அச்சுறுத்தல்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் இலங்கையில் வறுமை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை மேற்கோள்காட்டி மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு அறிக்கை வௌியிட்டுள்ளது.

நாட்டிலுள்ள மொத்தக் குடும்பங்களில் கால்பங்கு குடும்பங்கள் உணவுப்பாதுகாப்பின்மை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதாக ஐ.நா மதிப்பிட்டுள்ளது.

ஊழல் மோசடிகள் மற்றும் முறையற்ற பொருளாதார நிர்வாகம் தொடர்பான பொறுப்புக்கூறலும், ஜனநாயக மறுசீரமைப்புக்களும் இன்னமும் பெருமளவுக்குப் பூர்த்திசெய்யப்படவில்லை எனவும் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார சீர்திருத்தங்கள், மனித உரிமைகளை பாதுகாப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளமை தொடர்பில் சர்வதேச பங்காளிகளுக்கு காண்பிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில், தற்போதுள்ள தீர்மானத்தை புதுப்பிப்பதற்கு மேலதிகமாக இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.