பொலிஸ் மா அதிபருக்கான நீதிமன்ற உத்தரவு தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!

பொலிஸ் மா அதிபருக்கான நீதிமன்ற உத்தரவு தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவானது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை தடுக்காது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவொரு காரணத்திற்காகவும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒன்றாகக் கையாளும் திறன் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இருப்பதாக அவர், கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல்

தற்போதும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அடிப்படை வேலைகள் மாவட்ட தேர்தல் செயலாளர் காரியாலயத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இந்த வார இறுதியில் தீர்மானிக்கப்படும் எனவும் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் கையாளும் திறன் ஆணைக்குழுவுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இரண்டு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்த முடியாது எனவும், பொருத்தமான இரண்டு நாட்களில் தேர்தலை நடத்த முடியும் எனவும் கூறியுள்ளார்.