சந்திம வீரக்கொடியை அச்சுறுத்திய குற்றச்சாட்டு - பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதி மன்னிப்பு கோரல்!

சந்திம வீரக்கொடியை அச்சுறுத்திய குற்றச்சாட்டு - பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதி மன்னிப்பு கோரல்!

நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற குழு கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடியை அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மற்றும் இராணுவ தளபதி விகும் லியனகே ஆகியோர், சந்திம வீரக்கொடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நாடளுமன்ற சிறப்புரிமை குழு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் வீரக்கொடி, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதன்போது பாதுகாப்புச் செயலாளரும் இராணுவத் தளபதியும் தம்மை அச்சுறுத்தியதாக அவர் எழுப்பிய சிறப்புரிமை விவகாரம் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் சிறப்புரிமைக் குழு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது.

பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தைக் குறைப்பதற்கு, இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதை விட இராணுவ உயர் அதிகாரிகளின் செலவைக் குறைப்பதே மேல் என அந்தக்குழுக் கூட்டத்தில் தாம் குறிப்பிட்டதாகவும், பாதுகாப்புச் செயலாளர் அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாகவும் சந்திம வீரக்கொடி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். 

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக இவ்வாறான அச்சுறுத்தல் அறிக்கைகளை வெளியிடுவது நிலையியற் கட்டளைகளுக்கு எதிரானது எனவும், அவர்களை சிறப்புரிமைக் குழுவின் முன் அழைக்குமாறு சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன்படி, தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் இராணுவத் தளபதி விகும் லியனகே ஆகியோர் சிறப்புரிமைக் குழுவிற்கு அழைக்கப்பட்டு அவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

இதனையடுத்து குழுவின் தலைவர் பாரபட்சமின்றி கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும், கூட்டங்களின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

குழு கூட்டங்களில் கலந்துகொள்ளும் அதிகாரிகள், நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தை அறிந்திருக்க வேண்டும் என்றும் சிறப்புரிமைக் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்தநிலையில் சிறப்புரிமைக் குழுவின் பரிந்துரைகளை அடுத்து, பாதுகாப்புச் செயலாளரும் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினர் வீரக்கொடியிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர்.