அத்துமீறும் தமிழக ரோலர் படகுகளுக்கு எதிரான வடபகுதி மீனவர்களின் போராட்டத்திற்கு ஈரோஸ் ஆதரவு!

அத்துமீறும் தமிழக ரோலர் படகுகளுக்கு எதிரான வடபகுதி மீனவர்களின் போராட்டத்திற்கு ஈரோஸ் ஆதரவு!

அத்துமீறி பிரவேசிக்கும் தமிழக ரோலர் படகுகளுக்கு எதிரான வடபகுதி மீனவர்களின் போராட்டத்திற்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆதரவு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி வடபகுதி மீனவர்களுக்கு பாதிப்பேற்படாத வகையில் பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் ரோலர் படகுகளுக்கு எதிரான வடபகுதி மீனவர்களின் போராட்டத்திற்கு  ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆதரவு வழங்கும் என கட்சியின் பொதுச்செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

வடபகுதி மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். 

“தமிழக மீனவர்கள் நவீன இராட்சத படகுகளின் துணையோடு தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலைகளுடன் இலங்கையின் வடபிராந்திய கடற்பகுதியில் அத்துமீறி பிரவேசித்து மீன்வளத்தை கொள்ளையிட்டுச் செல்வது தமிழர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல இலங்கையின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் விடயம் என்பதை இலங்கை அரசாங்கம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஆகவே, எமது நாட்டின் மீன்வளத்தை இன்னொரு நாடு அடாத்தாக அபகரித்து செல்வதை தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்தோடு பேச்சு நடத்தி வடபகுதி மீனவர்களுக்கு பாதிப்பேற்படாத வகையில் பொருத்தமான நடவடிக்கை எடுக்குவேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

எமது நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் தமிழக ரோலர் படகுகளுக்கு எதிரான வடபகுதி மீனவர்களின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவையும் நாம் வழங்குவோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியாலும் காலநிலை மாற்றத்தாலும் மீனவ தொழிலாளர்கள் மிக மோசமான நெருக்கடிகளுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு பாதிப்பேற்படுத்தும் வகையில் இந்திய குறிப்பாக தமிழக மீனவர்கள் நூற்றுக்கணக்கான அதிநவீன படகுகள்  இலங்கையின் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி உட்புகுந்து மீன்குஞ்சிகளைக்கூட விட்டுவைக்காது அனைத்தையும் அள்ளிச்செல்வது மனிதாபிமான செயற்பாடாக இருக்காது.

இலங்கையின் கடற்படையினர் கடல் எல்லை பாதுகாப்பு ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது அவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகளில் உள்நுழைந்து மீன்வளத்தை சுரண்டிச் செல்வது ஆச்சரியமாகவும் இருப்பதோடு, இது இலங்கையின் ஆசிர்வாதத்தோடு நடக்கின்றதா என்ற நியாயமான சந்தேகமும் வலுக்கின்றது. 

இன்னொரு பக்கம் வடபகுதி தமிழ் மீனவர்ளுக்கும் தென்னிந்திய தமிழ் மீனவர்களுக்குமிடையில் பகைமை ஏற்படுத்துவதற்காகவும் தமிழக மக்களுடனான எமது தொப்புள்கொடி உறவை வெட்டி எறிவதற்கும் இப்பிரச்சினை எரியும் நிலையில், வைத்திருப்பதற்கான சூழ்ச்சியாகவும் இதற்கு பின்னால் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவு இருக்குமோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

அத்துடன், இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் ரோந்துப்பணிகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர் என்று பாராட்டப்படுகின்ற நிலையில் அதே கரிசனையையும் திறமையையும் வடக்கு கடற்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத அத்துமீறல்களை தடுப்பதிலும் கவனம் செலுத்தவேண்டும்.

எது எப்படியோ இலங்கை வடபகுதி மீனவர்களின் தொழில் பாதுகாப்பில் இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் தமிழக முதல்வரும் தமிழக மீனவசங்கங்களும்  மனிதாபிமான அடிப்படையில் தீர்வுகாண வேண்டும்.

அதேவேளை, தங்களது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாணும் முகமாக இலங்கை வடபகுதி மீனவ உறவுகள் முன்னெடுக்கும் கவனயீர்ப்பு போராட்டங்கள் உட்பட அனைத்து செயற்பாடுகளுக்கும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி தனது முழுமையான ஆதரவை வழங்கும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.