துரித உணவு வகைகளால் சிறார்களுக்கு ஒவ்வாமை நோய்!

துரித உணவு வகைகளால் சிறார்களுக்கு ஒவ்வாமை நோய்!

சிறுவர்கள் உண்ணும் உணவு தொடர்பில் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

துரித உணவு வகைகளை உண்பதால் சிறுவர்களுக்கு அடோபிக் எக்ஸிமா எனப்படும் ஒருவித ஒவ்வாமை நோய் ஏற்படும் என கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் தோல் நோய் வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள உலக அடோபிக் எக்ஸிமா நோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் ,இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில், சுமார் முப்பது சதவீத சிறுவர்கள் அடோபிக் எக்ஸிமா எனப்படும் ஒவ்வாமை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த நோயானது மரபணு ரீதியாக பரவக்கூடியது என்பதுடன் ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு மற்றும் மூக்கு வடிதல் போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகளாகும்.

இந்த நோய் அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலும் அதிகமாக காணப்படுவதுடன, இளம் பெண்கள் மத்தியிலும் இந்நோய் அபாயம் அதிகம் இருப்பதாக அவர்  சுட்டிக்காட்டினார்.