வைத்தியசாலைகளை மூடவேண்டிய நிலை - அரச மருத்துவ அதிகாரிகள் எச்சரிக்கை!

வைத்தியசாலைகளை மூடவேண்டிய நிலை - அரச மருத்துவ அதிகாரிகள் எச்சரிக்கை!

போதிய வைத்தியர்கள் இன்மை பிரச்சினை நீடித்தால் வைத்தியசாலைகளை மூடவேண்டிய நிலையேற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அச்சம் வெளியிட்டுள்ளது.

உரிய தரப்பினர் இலங்கையின் மருத்துவ அமைப்புக்குத் தேவையான அளவுக்கு வைத்தியர்களை நியமிப்பதற்கு அனுமதி வழங்காவிட்டால் வைத்தியர்கள் இன்றி பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளை மூடுவது குறித்து தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இலங்கை அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமால் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்படும் வைத்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காததால் நாட்டின் மருத்துவத்துறையில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப நியமிக்கப்படும் வைத்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ள அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் மேலும் அதிக வைத்தியர்களை உருவாக்க வேண்டும்.

அத்துடன பயிற்றுவிக்க வேண்டும், வசதிகளை அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்து வருகின்ற போதிலும் புதிய வைத்தியர்களை உருவாக்கினாலும் அவர்களுக்கு நாட்டில் தொழில் வழங்க முடியாத நிலையேற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1390 வைத்தியர்கள் தங்கள் நியமனங்களை பெற்றுக் கொள்வதற்காக 08 மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. 

நோயாளருக்கு உரிய சேவையை வழங்க முடியாமல் தடுமாறும் வைத்தியசாலைகளுக்கு உதவக்கூடிய வைத்தியர்களின் பரிதாபமான துரதிர்ஷ்டவசமான நிலை இதுவாகும்.

நியமனங்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களை அறிந்தும் தொடர்புபட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.