​அனைத்து ராசிகளுக்குமான குருப் ​பெயர்ச்சி பலன்கள்!

​அனைத்து ராசிகளுக்குமான குருப் ​பெயர்ச்சி பலன்கள்!

மேஷம் - Guru Peyarchi Palangal 2024 - 2025 (TAMIL)

ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2024-2025 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..? முழுமையான குருபெயர்ச்சி பலன்களை இங்கே பார்​வையிடலாம்!

மேஷம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

காலபுருஷ தத்துவத்தில் முதல் ராசி மேஷம். இதில் அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் ஆகிய நட்சத்திரங்கள் அடக்கம். செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட மேஷராசிக்காரர்கள் அனைத்திலும் முன்னணியில் இருக்க முயல்பவர்கள். 

அப்படிப்பட்டவர்களைக் கடந்த ஓர் ஆண்டாக ராசிக்குள் அமர்ந்த குருபகவான் முடிக்கினார். இதனால் பணவரவில் தாமதம், வேலை பதவிகள் கிடைப்பதில் தடை, ஆரோக்கியத்தில் தொடர்ந்து பிரச்னை என்று ஏதேனும் ஒன்று இருந்துகொண்டே இருந்தது. இந்த ஆண்டு மே - 1 - ம் தேதி முதல் குருபகவாம் மேஷத்தில் இருந்து ரிஷப ராசிக்குள் அடியெடுத்துவைக்க இருக்கிறார். 

இனி அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். தடைப்பட்ட பதவி, வேலை, அரசுவழியில் அனுகூலம் ஆகியன கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் களைகட்டும். 

திருமணம் எதிர்பார்த்துக்காத்திருக்கும் மேஷ ராசி அன்பர்களுக்குத் திருமணம் கூடிவரும். குழந்தை பாக்கியத்துக்காக இதுவரை பரிகாரங்கள், வைத்தியங்கள் என்று செய்துபார்த்து ஏமாந்தி போயிருந்தால் இந்த ஆண்டு உங்களுக்கு அழகான குழந்தை பிறக்க வாய்ப்புண்டு.

இதுவரை அடுத்தவர்கள் புண்படும்படிப் பேசி பலரின் நட்புகளை இழந்தீர்களே...  இனி பேச்சில் இனிமை கூடும். சாமர்த்தியமாகப் பேசிக் காரியம் சாதிப்பீர்கள். நினைத்த காரியங்கள் வெற்றியாகும். செல்வம் பலவழிகளிலும் வரும். வீடு மனை வாங்கும் ஆவல் பிறக்கும்.

குரு பார்வை பலன்கள்

குருபகவானின் பார்வை 6,8,10 ஆகிய வீடுகளில் விழுகிறது. 6 -ம் வீடான கன்னியை குருபார்ப்பதால் இனி கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வீடு வாங்கப் புதிய கடன் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு குறைந்த வட்டிக்குக் கடன் கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். பிரச்னைகொடுத்த சத்ரு இனி ஓடி ஒளிவார். மனதில் இறைச்சிந்தனை அதிகரிக்கும்.

குருபகவான் 8 -ம் வீட்டைப் பார்ப்பதால் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். ஆயுள் விருத்தியாகும்.

குருபகவானின் பார்வை 10 - ம் வீட்டில் விழுவதால் உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். புதிய வேலை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு ஆகியன தேடிவரும். தொல்லைதந்த சக ஊழியர்கள், அதிகாரிகள் மாறிப்போவார்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.5.24 முதல் 12.6.24 வரை உங்கள் பூர்வபுண்ணியாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் குழந்தையில்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் நீங்கும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். 

விலையுயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளை அவர்கள் ஆசைப்பட்ட கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். அதிக வட்டிக் கடனை தீர்க்க புது வழி பிறக்கும். நட்பு வட்டாரம் விரியும்.

12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25 வரை உங்கள் சுகாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டிற்கு குடி புகுவீர்கள். தாயாருக்கு இருந்த மூட்டுவலி, நெஞ்சு வலி குறையும். அவருடன் இருந்த மனக்கசப்புகளும் நீங்கும். 

கலை, இசையில் நாட்டம் பிறக்கும். வீடு கட்ட தாமதமான ப்ளான் அப்ரூவலாகி வரும். புது வாகனம் வாங்குவீர்கள். கோழித்தூக்கம் போய், இனி நிம்மதியான  தூக்கம் வரும்.

19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை உங்கள் ராசிநாதானான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குருபகாவன் செல்வதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். ]

சகோதரிக்குத் திருமணம் முடியும். வெளிமாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். ஆனால் கொஞ்சம் அலைச்சலும், செலவினங்களும் இருந்து கொண்டேயிருக்கும்.

வியாபாரம் : உங்கள் ரசனைக்கேற்றபடி கடையை அலங்கரிப்பீர்கள். வாடிக்கையாளர்களும் விரும்பி வருவார்கள். பழைய பாக்கிகள் எளிதாக வசூலாகும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். 

மார்ச், ஏப்ரல் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்கும். கெமிக்கல், கமிஷன், ஹோட்டல், பைனான்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் தேடி வருவார்கள்.

உத்தியோகம் : எதற்கெடுத்தாலும் உங்களையே குற்றம் சொல்லிக் கொண்டிருந்த மேலதிகாரி இனிப் பணிந்து போவார். சகஊழியர்கள் உங்களை ஏளனப்படுத்திப் பேசினார்களே! இனி உங்களை மதிப்பார்கள். பதவியுயர்வு சம்பந்தப்பட்ட வழக்கில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும்.  சில வாய்ப்புகள் தேடி வரும். கணினித் துறையினர்கள் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவார்கள்.
 
இந்த குரு மாற்றம் பிரச்னைகளின் பிடியிலிருந்து விடுபட வைப்பதுடன் வாடியிருந்த உங்கள் வாழ்வில் வசந்தத்தை வாரி வழங்குவதாக அமையும்.

ரிஷபம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்
சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட ரிஷபராசிக்காரர்கள், தன் அழகைப் பராமரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். மனத்தில் ஆயிரம் இருந்தாலும் அவ்வளவு எளிதாக அவர்களின் பேச்சில் அது வந்துவிடாது. சாமர்த்தியமான பேச்சுக்குச் சொந்தக்காரர்கள். அப்படிப்பட்ட ரிஷபராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களைத் தரும் என்பதைப் பார்ப்போம்.

குருபகவான் இதுவரை 12 - ம் வீட்டில் அமர்ந்து கட்டுக்கடங்காத செலவுகளைக் கொடுத்துக்கொண்டிருந்த குருபகவான் தற்போது ராசிக்குள்ளேயே வருகிறார். ஜன்ம குரு பலவிதமான தடைகளை ஏற்படுத்துவாரோ என்கிற கலக்கத்தோடு இருந்தீர்கள் என்றால் அவற்றை விட்டுவிடலாம். பகைவீட்டில் அமர்ந்தாலும் குருபகவான் நற்பலன்களையே தருவார். 

இதுவரை செலவுகளால் வாடியிருந்த உங்கள் மனம் மலரும். நன்மைகள் தேடிவரும். பெரிய கஷ்டங்கள், நோய்கள் இருப்பதுபோன்ற மனபிரமைகள் விலகும். என்றாலும் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்ல்து. உடற்பயிற்சி யோகா, தியானம் போற்றவற்றைத் தொடர்ந்து செய்துவாருங்கள். அவ்வப்போது ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

ராசிக்கு 5 -ம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குருபகவான் பார்ப்பதால் குடும்பத்தில் நற்பலன்கள் அதிகரிக்கும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் விலகும். அவர்களின் கல்வி, திருமணம் தொடர்பான முயற்சிகள் பலிதமாகும். பித்ருக் காரியங்களை முறையாகச் செய்யத் தடைப்பட்ட சுபகாரியங்கள் தேடிவரும். குலதெய்வக் கோயிலுக்கும் ஒருமுறை போய் வழிபாடு செய்துவருவீர்கள்.

ராசிக்கு 7 -ம் வீட்டை குருபகவான் பார்ப்பது மிகவும் அற்புதமான விஷயம். குடும்பத்தில் இதுநாள்வரை இருந்த பிரச்னைகள் விலகும். அமைதி பிறக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த ஈகோ பிரச்னை விலகி கருத்தொற்றுமை ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும்.

ராசிக்கு 9 ம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். அவர் மூலம் எதிர்பார்த்த பணம் வரும். பூர்வீகச் சொத்து தொடர்பான பிரச்னைகளில் சாதகமான தீர்ப்பு வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
1.5.24 முதல் 12.6.24 வரை உங்கள் சுகாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் வீடு மனை அமையும். பெற்றோரின் உடல்நிலை சீராகும். புது வாகனம் வாங்குவீர்கள். 

இழுபறியாக இருந்த அரசு வேலைகள் சாதகமாக முடிவடையும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். என்றாலும் இக்காலகட்டத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காய்ச்சல், சளித்தொந்தரவும், விரக்தி, ஏமாற்றங்கள் வந்து நீங்கும்.
 
12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25 வரை உங்கள் சேவகாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேரும். இளைய சகோதரர் பாசமாக நடந்து கொள்வார். சகோதரிக்குத் திருமணம் கூடி வரும். சொத்து சம்பந்தப்பட்டப் பிரச்னை சுமுகமாக முடியும். 

அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். முக்கியப் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கோயில் விழாவில் முதல் மரியாதை கிடைக்கும். ஆனால் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கியக் குறைவும், மன இறுக்கமும், திடீர் பயணங்களும், செலவுகளும், வந்துபோகும்.

19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை உங்கள் சப்தம - விரையாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் மனைவி வழி உறவினர்களால் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பிள்ளைகளின் பள்ளி கல்லூரிச் சேர்க்கைகள் நல்ல விதத்தில் முடியும். வேற்று மொழியினர் உதவுவார்கள். ஆனால் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் கவனமாகச் செயல்படுவது நல்லது.

வியாபாரம்

சந்தை நுணுக்கங்களை கற்றுக் கொண்டு பெரிய முதலீடுகளைச் செய்யுங்கள். வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போங்கள். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். மற்றவர்களின் அறிவுரையைக் கேட்டு புதிய துறையில் முதலீடு செய்ய வேண்டாம். என்றாலும் லாபம் அதிகரிக்கும். 

அக்கம் பக்கம் கடைக்காரர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். கெமிக்கல், ஹோட்டல், துணி வகைகளால் லாபம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். என்றாலும் பிரச்னைகளின் விவரங்களை அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைப்பது நல்லது.

உத்தியோகத்தில் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். கௌரவப் பதவிகள் வரும். சக ஊழியர்கள் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசினாலும் அவர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். மேலதிகாரிகள் மதிப்பார்கள். தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் பதவியுயரும். 

சம்பளமும் கூடும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் நினைத்ததை முடிப்பீர்கள். ஆனால் அவ்வப்போது மறைமுக எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டி வரும். கலைஞர்களே! உங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வந்தாலும் அஞ்ச வேண்டாம். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த குரு பெயர்ச்சி சவால்களைச் சந்திக்க தேவையான சாமர்த்தியத்தையும், சகிப்புத்தன்மையையும், பணவரவையும் தரும்.

மிதுனம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்
புதனை ராசிநாதனாகக் கொண்ட மிதுனராசி அன்பர்கள், பிரச்னைகள் எவ்வளவு வந்தாலும் தளராமல் சந்தித்து வெற்றிபெறுபவர்கள். 

பலர் கடின முயற்சி செய்து முடிக்கும் காரியங்களை தம் அனுபவ அறிவால் மிக எளிதாக முடித்துவிடுபவர்கள் இவர்கள்தான். மிருகசீரிடம் 3 -ம் பாதம் முதல் புனர்பூசம் 3 -ம்பாதம் வரையிலான நட்சத்திரங்களை உள்ளடக்கிய மிதுன ராசிகாரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களைக் கொடுக்கும் என்பதைக் காண்போம்.

இதுவரை மிதுனம் ராசிக்கு 11 ம் வீட்டில் அமர்ந்து பலவித நன்மைகளையும் வாரிவழங்கிக்கொண்டிருந்த குருபகவான் மே 1 -ம் தேதி முதல் 12 -ம் வீட்டில் வந்து அமர்ந்து பலன்தர இருக்கிறார். இனி செலவுகள் கூடும். அவற்றை சுபச்செலவுகளாக மாற்றிக்கொள்வது நல்லது. அலைச்சல்களும் அதிகரிக்கும். 

சிலருக்கு அவ்வப்போது வீண் கவலையால் தூக்கம் பாதிக்கப்படக் கூடும். புகழ்பெற்ற கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்வீர்கள். இதுவரை தடைப்பட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

ராசிக்கு 4 -ம் இடமான கன்னியை குருபகவான் பார்ப்பதால் நல்ல காற்றோட்டமான வீட்டுக்குக் குடிப்போவீர்கள். பழைய வண்டி வாகனங்களை மாற்றுவீர்கள். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். அவருக்கான மருத்துவச் செலவுகள் குறையும்.

ராசிக்கு 6 - ம் வீடான விருச்சிகத்தை குருபகவான் பார்ப்பதால் கடன் பிரச்னை ஒன்றைத் தீர்க்கும் வாய்ப்பு கிடைக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். நீண்ட நாள்களாக இருந்துவந்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

ராசிக்கு 8 -ம் வீடான மகரத்தை குருபகவான் பார்ப்பதால் ஆரோக்கியம் மேம்படும். பங்குச் சந்தை லாபம் தரும். ஆயுள் விருத்தி உண்டாகும். என்றாலும் தொட்டதெற்கெல்லாம் கோபப்பட்டுக்கொண்டு இருக்காதீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.5.24 முதல் 12.6.24 வரை உங்கள் தைரிய ஸ்தானாதிபதி சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் அதிரடி முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதரருக்குத் திருமணம் கூடி வரும். வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். பிள்ளைகளை ஆசைப்பட்ட கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும். வி.ஐ.பிகள் உதவுவார்கள்.

12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25 வரை உங்களின் தனாதிபதி சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். இங்கிதமாகவும், எதார்த்தமாகவும் பேசிப் பல விஷயங்களை சாமர்த்தியமாக முடிப்பீர்கள். திருமணம் கூடி வரும். குழந்தை பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் அமைதியுண்டாகும்.

19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை உங்கள் சஷ்டம லாபாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் சகோதர வகையிலும், வீடு சொத்துப் பராமரிப்பு வகையிலும் செலவினங்கள் அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்கள் வந்துபோகும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். புறநகர் பகுதியில் வீட்டு மனை அமையும்.

வியாபாரம்

கொடுக்கல் - வாங்கல் விஷயத்தில் கறாராக இருங்கள். சரக்குகள் கொள்முதல் செய்யும் போது கவனம் தேவை. சந்தை நிலவரத்தை தெரிந்து செயல்படப்பாருங்கள். தள்ளுபடி, சலுகைகளை அறிவித்துப் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களால் பிரச்னைகள் வரும். கடையை விரிவுபடுத்துவீர்கள். 

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறப் போராட வேண்டி வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் சிலர் தன் பங்கைக் கேட்டுத் தொந்தரவு தருவார்கள். உணவு, டிராவல்ஸ், பப்ளிகேஷன், அழகு சாதனப் பொருள்களால் லாபமடைவீர்கள். அதிக முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள்.
   
உத்தியோகம்

விமர்சனங்களும், வீண் பழியும் வந்து செல்லும். திறமை இருந்தும், கடினமாக உழைத்தும் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டேயிருப்பீர்கள். அதிகாரிகள் ஆதரவாகப் பேசினாலும் கூடுதலாக உங்களுக்கு வேலைகளைத் தருவார்கள். சலித்துக் கொள்ளாமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுப்பது நல்லது. 

சக ஊழியர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். விரும்பத்தகாத இடமாற்றம் வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு சற்றுத் தாமதமாகக் கிடைக்கும். அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்க வேண்டாம். கலைஞர்களே! வீண் வதந்திகள், கிசுகிசுக்கள் ஓயும். உங்கள் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள். என்றாலும் மூத்த கலைஞர்களைப் பற்றி விமர்சித்துப் பேசவேண்டாம்.

இந்த குரு மாற்றம் ஓய்வில்லாமல் உங்களைக் கடினமாக உழைக்க வைத்தாலும், அதற்கேற்ற உயர்வில்லையே என சில நேரங்களில் ஏங்க வைக்கும்.

கடகம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்
கற்பனை சக்தியில் சிறந்துவிளங்கிக் கலைஞர்களாகத் திகழும் கடகராசி அன்பர்கள், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஆளுமை மிக்கவர்கள். இவர்கள் நினைத்ததை அடையும்வரை சோர்ந்துபோகமாட்டார்கள். எத்தனை தடை வந்தாலும் அதைத் தாண்டிக்குதித்து வெற்றி இலக்கை எட்டுவார்கள். நட்சத்திர மண்டலத்தில் புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய கடக ராசியில் வரும். இப்படிப்பட்ட ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படி அமையும் என்பதைக் காண்போம்.

குருபகவான் இதுவரை உங்கள் உத்தியோகஸ்தானத்தில் அமர்ந்து எதையும் சரியாகச் செய்ய விடாமல் தொல்லை செய்துகொண்டிருந்தார். மேலும் அஷ்டம சனியால் ஏகப்பட்ட பிரச்னைகள்யும் சந்தித்துக் கொண்டிருந்தார்கள். தொட்ட செயல்களில் எல்லாம் தோல்வி, விரக்தி சூழ்ந்துகொண்டிருந்தது. மே 1 -ம் தேதி முதல் அவர் உங்களின் லாப வீட்டில் வந்தமர்கிறார். பதினொன்றில் அமரும் கிரகம் அற்புதமான பலன்களைக் கொடுக்கும். அதிலும் குருபகவான் பூரண சுபர். அவர் உங்கள் கஷ்டங்களில் இருந்து விடுவித்து சுதந்திரமாக சுவாசிக்கச் செய்யப்போகிறார்.

பணவரவில் இருந்த தடை நீங்கும். பொன் பொருள் சேரும். தடைப்பட்ட சுபகாரியங்கள் குடும்பத்தில் ஏற்பாடாகும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். இதுவரை கண்டும் காணாமல் போனவர்கள் தேடிவந்து பேசுவார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். அதற்குரிய மரியாதையும் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு 3 -ம் இடமான கன்னியை குருபகவான் பார்ப்பதால் சகோதர வகையில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீட்டில் புதிய எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் வாங்குவீர்கள்.

ராசிக்கு 5 ம் இடமான விருச்சிகராசியை குருபகவான் பார்ப்பதால் பிள்ளைகள் இனி நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள். அவர்கள் மூலம் பெருமை உண்டு. அவர்களின் கல்வி திருமண முயற்சிகள் பலன்தரும். பூர்விகச் சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.

ராசிக்கு 7 -ம் வீடான மகரத்தை குருபகவான் பார்ப்பதால் இனி உற்சாகமாக இருப்பீர்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் விலகும். பணவரவும் உண்டு.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
1.5.24 முதல் 12.6.24 வரை உங்களின் தனாதிபதியான சூரியனின் கார்த்திகை  நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் திடீர் பணவரவு உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். சமாளிக்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டு. கண் வலி குறையும். தந்தை வழி உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும்.

12.6.2024 முதல் 19.8.2024 வரை மற்றும் 2.12.2024 முதல் 5.4.2025 வரை உங்கள் ராசிநாதனான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் பிரபலமாவீர்கள். வருமானம் உயரும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். சொந்த பந்தங்களின் வருகையால் வீடு களைகட்டும். குலதெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அடிக்கடிப் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வி.ஐ.பி வீட்டு விசேஷங்களில் முதல் மரியாதை கிட்டும். வீடு, மனை அமையும்.

19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். உங்களின் அந்தஸ்து உயரும். பணப்புழக்கம் அதிகரிப்பால் வருங்காலத்திற்காகச் சேமிப்பீர்கள். சொத்துப் பிரச்னை சுமுகமாகும். தள்ளிப் போன வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளை பாக்கியம் உண்டு. பிள்ளைகளால் புகழடைவீர்கள்.

வியாபாரம்

தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத்தீரும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். இடவசதியில்லாமல் தவித்தீர்களே! கடையை விசாலமான இடத்திற்கு மாற்றுவீர்கள். வேலையாட்களின் தொந்தரவு குறையும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களைக் கவரப் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உணவு, இரும்பு, புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும்.
   
உத்தியோகம்

உங்களை உருகுலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். தள்ளிப் போன பதவியுயர்வு, சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும். மூத்த அதிகாரியிடமிருந்து அலுவலக ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள். வேலைச்சுமை குறையும். தலைமைப் பொறுப்பு தேடி வரும்.  வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து அதிக சம்பளத்துடன் கூடிய அழைப்பு வரும். கலைஞர்களே! வீண் வதந்திகள், கிசுகிசுக்கள் என மன உளைச்சலுக்கு ஆளானீர்களே! இனி துளிர்த்தெழுவீர்கள். புது வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த குரு மாற்றம் சிக்கல்களிலிருந்து உங்களை விடுவிப்பதுடன், திடீர் வளர்ச்சியையும், வெற்றியையும் தருவதாக அமையும்.

சிம்மம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்
நட்சத்திர மண்டலத்தில் மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் வரையிலான நட்சத்திரங்கள் சிம்மராசியைச் சேர்ந்தவை. சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் தலைமைப்பண்பு கொண்டவர்கள். தன்னை நம்பியவர்களைக் கைதூக்கிவிடவும் எதிர்த்தவர்களை வாழ்நாள் முழுவதும் புறந்தள்ளவும் செய்பவர்கள். அப்படிப்பட்ட சிம்மராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களைக் கொடுக்கும் என்பதைப் பார்ப்போம்.

இதுவரை 9 -ம் இடத்தில் அமர்ந்து பதவி, கௌரவம், பாராட்டு, பணவரவு ஆகியவற்றைத் தந்துவந்த குருபகவான் தற்போது 10 - ம் இடத்துக்குச் சென்று அமர்கிறார். பத்தில் குருவந்தால் பதவியைப் பரிப்பாறே என்கிற கவலையை விடுங்கள்.

வெற்றி வாய்ப்புக தேடி வரும். என்றாலும் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். எந்த விஷயங்களையும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது.

தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.  தன்னம்பிக்கை குறையும். உறவினர்களில் சிலர் மதிக்காமல் போவார்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். சின்ன சின்ன அவமானங்கள் வந்து நீங்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள்.

குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய வீடுகளைப் பார்ப்பதால் பல நற்பலன்கள் விளையும். இரண்டாம் வீடான தன குடும்ப வாக்கு ஸ்தானத்தை குருபகவான் பார்ப்பதால் கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஏற்கெனவே ஈகோ பிரச்னையால் பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்வார்கள். பணவரவில் இருந்த தடைகள்நீங்கும். பேச்சிலும் கனிவும் முதிர்ச்சியும் தேடிவரும்.

நான்காம் வீட்டின் மீது குருபகவானின் பார்வை படுவதால் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். வீட்டில் மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய வாகனங்களை மாற்றிப் புதுவாகனம் வாங்குவீர்கள். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும்.

6 -ம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் கடன்களில் ஒருபகுதியைப் பைசல் செய்வீர்கள். எதிர்களின் தொல்லைகளும் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
1.5.24 முதல் 12.6.24 வரை உங்கள் ராசிநாதனான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் உங்களின் செல்வாக்கு உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பெரிய பொறுப்புகள் தேடி வரும். உறவினர்கள் மதிப்பார்கள். நிர்வாகத்திறன்  கூடும். ஷேர் மூலம் பணம் வரும். வீடு மனை வாங்குவீர்கள். நோய் விலகும்.
 
12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25 வரை உங்களின் விரைய ஸ்தானதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் அடிக்கடி பதற்றப்படுவீர்கள். முன்கோபத்தால் ஆரோக்கியம் குறையும். தூக்கம் கெடும். அநாவசியமாக அடுத்தவர்களை சந்தேகப்பட வேண்டாம். தவிர்க்கமுடியாத செலவுகளும், தர்ம சங்கடமான சூழ்நிலையும் அதிகரிக்கும்.

19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். கருத்து வேறுபாடால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். பிள்ளைபாக்கியம் கிடைக்கும். சொத்து வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சகோதரங்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.

வியாபாரம்

சந்தை நிலவரங்களை அறிந்து கொள்முதல் செய்யப்பாருங்கள். மற்றவர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். வேலையாட்கள் சில சமயங்களில் முரண்டு பிடிப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை விரிவுபடுத்துவீர்கள். கெமிக்கல், கமிஷன், எலக்ட்ரிக்கல் மற்றும் துணி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் முரண்டு பிடித்த பங்குதாரர்கள் வளைந்து வருவார்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பாராத லாபமும் கிடைக்கும்.

உத்தியோகம்

வேலைச்சுமை ஓரளவு இருக்கும். மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். அநாவசியமாக விடுப்புகள் எடுக்க வேண்டாம். சக ஊழியர்களை அரவணைத்துப் போங்கள். மூத்த அதிகாரிகளைப் பற்றி குறை கூறாதீர்கள். என்றாலும் ஓரளவு உயர்வு உண்டு. கலைஞர்களே! உங்களை சிலர் விமர்சித்துப் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அதையும் தாண்டி முன்னேறுவீர்கள். போராடிப் படைப்புகளை வெளியிடுவீர்கள்.

இந்த குருமாற்றம் உங்களுக்கு அனுபவ அறிவைத் தருவதுடன் தன் கையே தனக்குதவி என்பதனைப் புரிய வைக்கும்.

கன்னி- குரு பெயர்ச்சிப் பலன்கள்
உத்திரம் 2-ஆம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் ஆகிய நட்சத்திரங்களைக் கொண்ட ராசி கன்னி ராசி. அமைதியாகப் பேசிக் காரியம் சாதிப்பவர்கள் இவர்கள்தான். ஆனால் தனக்கு நேர்ந்த அவமானங்களையே படிக்கட்டுகளாக்கி முன்னேறும் குணமும் இவர்களுடையது. அப்படிப்பட்ட கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படி அமையும் என்பதைக் காண்போம்.

இதுவரை கன்னிராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து பலவிதமான இன்னல்களையும் கொடுத்துக்கொண்டிருந்த குருபகவான் தற்போது 9 -ம் இடத்தில் வந்து அமர்கிறார்.

இனி தடைகள் விலகும். எதிர்த்தவர்களும் அடங்கிப்போவார்கள். துணிச்சலுடன் முடிவெடுப்பீர்கள். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் அன்பும் மகிழ்ச்சியும் கூடும். அனைத்தையும் செய்துமுடிக்கும் ஆற்றல் பிறக்கும். சிலருக்குப் புதிய வேலை கிடைக்க வாய்ப்புண்டு. பயணங்களும் அதனால் ஆதாயமும் அமையும். எதிர்பார்த்த நற்செய்திகள் தேடிவரும். உங்கள் படைப்பாற்றலை மீட்டெடுப்பீர்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள்.

ராசிக்கு குருபார்வை கிடைப்பதால் மனதில் இருந்த பயம் நீங்கும். எதையும் சாதிக்கும் துணிச்சல் பிறக்கும். எதிரிகளின் தொல்லைகள் விலகும். பலவகையிலும் பணம் வரும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். தந்தை வழியில் பணவரவு உண்டு. தந்தையின் ஆரோக்கியமும் மேம்படும்.

3 -ம் இடத்தை குருபகவான் பார்ப்பதால் காது சம்பந்தமான பிரச்னைகள் நீங்கும். நகைகள் வாங்கும் யோகம் வாய்க்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

5 -ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குருபகவானின் பார்வை படுவதால் பூர்விக சொத்துப் பிரச்னை தீரும். தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள். மகன் அல்லது மகளின் கல்வி, திருமணம் தொடர்பான முயற்சிகள் சிறப்பாக நடைபெறும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
1.5.24 முதல் 12.6.24 வரை உங்கள் விரையாதிபதி சூரியனின் கார்த்திகை  நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். இடவசதியில்லாத வீட்டிலிருந்து நல்ல வீட்டிற்கு மாறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். பிள்ளைகளை அவர்கள் விருப்பப்பட்ட பாடப்பிரிவில், நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களின் விஷேசங்களை முன்னின்று நடத்துவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.

12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25 வரை உங்களின் லாபாதிபதி சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர் பணவரவு உண்டு. ஷேர் லாபம் தரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. சொத்துப் பிரச்னைகள் தீர்வுக்கு வரும். அடுத்தடுத்த விஷேசங்கள், உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். சிலர் இருக்கும் வீட்டில் கூடுதல் அறை கட்டுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வழக்குகள் சாதகமாகும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும்.

19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை உங்களின் திருதிய அட்டமாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் அடுத்தடுத்த பயணங்களால் அலைச்சல் இருக்கும்.  இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். சித்திரை நட்சத்திரக் காரர்களுக்கு உஷ்ணத்தால் உடல்நலக் குறைவும், சிறு விபத்தும் வந்து நீங்கும். அநாவசியமாகக் கோபப்பட்டு யாரிடமும் கெட்ட பெயர் எடுக்காதீர்கள். புதிதாக சொத்து வாங்குவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும்.
 
வியாபாரம் : குரு பகவான் 3-ம் வீட்டைப் பார்ப்பதால் வியாபாரத்தில் இருந்து வந்த போராட்ட நிலை மாறும். பெரிய முதலீடுகளைப் போட்டுப் போட்டியாளர்களை திகைக்கச் செய்வீர்கள். தொல்லை கொடுத்த வேலையாட்கள் மாற்றிவிட்டு அனுபவமிகுந்தவர்களை பணியில் அமர்த்துவீர்கள். பழுதாகியிருந்த கடையை அழகாக்குவீர்கள். நவீன வசதிகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். எலக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ், கட்டட உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் இருந்து வந்த கருத்துமோதல்கள்  நீங்கும்.
 
உத்தியோகம் : உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார். வெகுநாள்களாக எதிர்பார்த்த பதவியுயர்வு இனி தேடி வரும். சக ஊழியர்கள் உங்களை சண்டைக்காரர்களாகப் பார்த்தார்களே! இனி சிரித்துப் பேசுவார்கள். கணினித் துறையினர்களுக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் புது சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களே! பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும். கிசுகிசுக்கள் ஓயும். சம்பள பாக்கி கைக்கு வரும். சக கலைஞர்கள் உங்களிடம் நட்புறவாடுவார்கள்.

இந்த குரு மாற்றம் அநாவசிய செலவுகளைக் குறைப்பதாகவும், எதிர்பார்ப்புகளில் வெற்றியை தருவதாகவும் அமையும்.

துலாம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசியில் சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ம் பாதம் ஆகிய நட்சத்திரங்கள் வரும். துலாராசிகாரர்கள் உள்ளொன்று வைத்து வெளியே ஒன்று பேசத்தெரியாதவர்கள். எல்லாருக்கும் தன்னால் என்ன நல்லது செய்ய முடியும் என்று யோசித்துச் செயல்படுபவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படி அமையும் என்று பார்ப்போம்.

இதுவரை 7 -ம் வீட்டில் அமர்ந்து பல நல்ல பலன்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த குருபகவான் தற்போது ராசிக்கு 8 -ம் வீட்டில் சென்று அமர்கிறார். 8 -ம் வீடான் ரிஷபமும் சுக்கிரனின் ராசியே. எனவே அஷ்டம குரு கஷ்டங்கள் தருவாரோ என்கிற பயம் தேவையில்லை.

அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் அதனால் ஆதாயமும் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். அநாவசிய செலவுகள் துரத்தும் என்றாலும் செலவுகளுக்குப் பஞ்சமில்லை. மனத்தின் பலவீனங்களை மறைக்கப்பாருங்கள். பிடிவாதப் போக்கை விட்டுவிடுங்கள். தீய பழக்கங்களிலிருந்து விலகியிருங்கள். நண்பர்களிலும் யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதை ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். கடன் பிரச்னை குறித்துக் கவலைப்படுவீர்கள். வேண்டாத அச்சம் உள்ளூர இருக்கும்.

குடும்பத்தில் அனைவரையும் அரவனைத்துப்போங்கள். குழந்தைகளிடம் கடுகடுப்பு காட்டவேண்டாம். கணவன் மனைவிக்குள் தேவையற்ற சந்தேகத்தைத் தவிர்ப்பது நல்லது. வேலைச்சுமையால் தூக்கம் குறையும். கனவுத் தொல்லைகளும் அவ்வப்போது வந்து நீங்கும். எல்லாப் பிரச்னைகளுக்கும் மற்றவர்களை நீங்கள் காரணம் கூறுவது அவ்வளவு நல்ல தல்ல.

குருபகவான் 2 - ம் வீட்டைப் பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். பணவரவு உண்டு. பணம் வந்தாலும் தங்கவில்லையே என புலம்பினீர்களே! இனி பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிக்கவும் செய்வீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். பலசிந்தனைகளுடன் தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் உடல் சோர்வு, வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். அம்மாவுடனான மனஸ்தாபங்கள் நீங்கும். அவர்வழிச் சொத்து கைக்கு வரும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப்படுவார்கள். வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. தலைமையின் பார்வை உங்கள் மேல் விழும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
1.5.24 முதல் 12.6.24 வரை உங்களின் பாதகாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் ஆரோக்கியம் பாதிக்கும். அலைச்சல் அதிகமாகும். சேமிப்புகள் கரையும். சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்த முயல்வார்கள். மூத்த சகோதர வகையில் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். புது முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. அரசு, வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள்.

12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25 வரை உங்களின் ஜீவனாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவியுயர்வு உண்டு. சவாலான காரியங்களைக் கூட கச்சிதமாக முடித்துக் காட்டுவீர்கள். வீண்பழி விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நகை வாங்குவீர்கள். கோபம் தணியும். வீடு, மனை அமையும். வாகனத்தை மாற்றுவீர்கள். பொது நிகழ்ச்சி, கோவில் விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். பிரபலமடைவீர்கள். மகளுக்கு திருமணம் முடியும்.

19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை உங்களின் தன சப்தமாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் வாழ்க்கைத்துணைவழியில் அலைச்சல் இருக்கும். முதுகுவலி, வயிற்றுவலி வந்து நீங்கும். புது சொத்து வாங்குவீர்கள். பிரபலங்களால் உதவியுண்டு. வீடு மாறுவீர்கள்.

வியாபாரம் : பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளைக் கனிவாகப் பேசி வசூலிப்பீர்கள். கடையை வேறிடத்திற்கு மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை அதிகப்படியாக வரவழைப்பீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசுக்க்ச் செலுத்த வேண்டியவற்றை முறையே செலுத்தி விடுங்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் இருந்து வந்த கூச்சல், குழப்பங்களெல்லாம் நீங்கும். பிரச்னைகளைத் தெளிவாக எடுத்துச் சொல்லுகள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள்.

உத்தியோகம் : காலநேரம் பார்க்காமல் உழைத்தும் அதற்கான பலனையும், பாராட்டையும் வேறொருவர் தட்டிச் சென்றாரே! இனி திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களிடம் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டாம். புது வேலைக்கு மாறும்போது யோசித்து செயல்படுங்கள். கணினித் துறையினர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். புது சலுகைகள் கிடைக்கும். வேலைப்பளு அதிகரிக்கத்தான் செய்யும். கலைஞர்களே! ஒருபுறம் விமர்சனம் இருந்தாலும் மற்றொரு புறம் உங்களின் திறமையால் சாதித்துக் காட்டுவீர்கள்.

இந்த குருப்பெயர்ச்சி மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றியையும், வாழ்வில் ஒருபடி முன்னேற்றத்தையும் தருவதாக அமையும்.

விருச்சிகம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்
கலகலப்பான பேச்சாலும் சுறுசுறுப்பான செய்கையாலும் அனைவரின் மனத்திலும் இடம்பிடிப்பவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள். நட்சத்திர மண்டலத்தில் விசாகம் 4-ம் பாதம் முதல், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் விருச்சிக ராசியில் வரும். செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களை வழங்கும் என்பதைக் காணலாம்.

கடந்த ஆண்டு குருபகவானின் செவ்வாயின் மேஷ ராசியில் சஞ்சரித்தாலும் 6 ம் இடத்தில் மறைந்திருந்தார். எனவே வரவேண்டிய நன்மைகள் தடைப்பட்டன. சுபநிகழ்ச்சிகள் தள்ளிப்போயிருக்கும். இனி எல்லாம் கூடிவரும். திருமண வயதில் உள்ள இளைஞர்களுக்குத் திருமண வாய்ப்புகள் தேடிவரும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை மூலம் பணவரவுக்கு வாய்ப்புண்டு. பிள்ளைவரம் வேண்டி நீங்கள் பார்க்காத மருத்துவரே இல்லை, இனி அழகான வாரிசு பிறக்கும். வங்கிக்கடனுதவியுடன் சொந்த வீடு வாங்குவீர்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். சொத்துப் பிரச்னை தீரும்.

குருபகவான் உங்கள் லாப வீட்டைப் பார்ப்பதால் தொட்ட காரியம் துலங்கும். மூத்த சகோதரரால் ஆதாயம் உண்டு. இளைய சகோதரர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். இனி கோபப்படாமல் பேசுவீர்கள். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் பதவி பட்டம் பெறுவீர்கள். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கோயில் திருவிழாக்களில் மரியாதை கிடைக்கும். ஏமாற்றங்கள், தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவ முன்வருவார்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள். உங்கள் மீது எதிர்கட்சிக்காரர்கள் சுமத்திய வீண் பழியெல்லாம் விலகும். அண்டை அயலாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
1.5.24 முதல் 12.6.24 வரை உங்களின் ஜீவனாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் சாதித்துக் காட்டுவீர்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த காரியங்களெல்லாம் முடிவுக்கு வரும். எதிலும் வெற்றி கிடைக்கும். புது வேலை வாய்ப்புகள் அமையும். அரசால் ஆதாயமடைவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும். தள்ளிப்போன கல்யாணம் கூடி வரும். வீடு, மனை வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். வி.ஐ.பிகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25 வரை உங்களின் பாக்கியாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் பணவரவு அதிகரிக்கும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் குறையும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. நிரந்தர வருமானத்திற்கு வழி தேடுவீர்கள். விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள்.  புது வாகனம் அமையும்.

19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை   உங்கள் ராசிநாதனான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர்யோகம் உண்டாகும். சொத்து வாங்குவீர்கள். ராஜ தந்திரத்தால் வெற்றியடைவீர்கள். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

வியாபாரம் : முடங்கிக் கிடந்த நீங்கள் புத்துயிர் பெறுவீர்கள். உங்களின் தனித்தன்மை வெளிப்படும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக்கடனுதவி கிடைக்கும். புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். படித்த அனுபவமுள்ள வேலையாட்களை கூடுதலாக நியமிப்பீர்கள். ரியல் எஸ்டேட், உணவு விடுதி, வாகன உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் ஓயும். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. புதிய ஏஜென்ஸி எடுப்பீர்கள். வராது என்றிருந்த பழைய பாக்கிகள் வந்துசேரும்.

உத்தியோகம் : ஓடி ஒடி வேலை பார்த்தும் கெட்டப் பெயர்தானே கிடைத்தது... இனி அந்த நிலை மாறும். மேலதிகாரியின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். பிப்ரவரி மாதத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். கணினித் துறையினர்கள் இழந்த சலுகையை மீண்டும் பெறுவார்கள். கலைஞர்களே! மறைந்து கிடந்த உங்கள் திறமையை வெளிக்கொண்டுவர நல்ல நிறுவனம் அமையும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.

இந்த குரு பெயர்ச்சி வருங்கால வாழ்விற்கு அடித்தளம் அமைத்துத் தருவதுடன் மனநிம்மதியையும் தருவதாக அமையும்.

தனுசு - குரு பெயர்ச்சிப் பலன்கள்
எந்த சோதனை வந்தாலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது என்று வாழ்பவர்கள் தனுசுராசிக்காரர்கள். முலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம் ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கிய தனுசு ராசியைச் சேர்ந்த அன்பர்கள் போராட்ட குணம் உள்ளவர்கள். நினைத்ததை சாதிக்கும்வரை உறக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட தனுசுராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படி அமையும் என்று பார்ப்போம்.

இதுவரை 5 - ம் வீட்டில் அமர்ந்து சகலவிதமான நன்மைகளையும் தந்துகொண்டிருந்த குருபகவான் மே 1 - ம் தேதி முதல் 6 -ம் இடம் சென்று மறைகிறார். இதனால் அடுத்த ஓர் ஆண்டுக்கு நீங்கள் அனைத்திலும் நிதானமாகச் செயல்பட வேண்டும். அதேவேளையில் குருபகவான் அவ்வப்போது உங்களுக்கு யோகபலன்களை அள்ளித்தருவார். என்றாலும் அவ்வப்போது வெளிவட்டாரத்தில் மரியாதை குறைவான சம்பவங்கள் நிகழும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் அடிக்கடி வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகும். ஒரளவு நல்லதே நடக்கும்.

வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதைச் செய்து முன்னேறப் பாருங்கள். உங்களிடம் பழகுபவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். என்றாலும் சில நேரங்களில் ஏமாற்றங்களை உணருவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். வீண் சந்தேகத்தாலும், ஈகோப் பிரச்னையாலும் பிரிவுகள் வரக்கூடும். எனவே பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

தவணை முறையில் பணம் செலுத்திப் புது வாகனம் வாங்குவீர்கள். தாழ்வுமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். உறவினர், நண்பர்களுடன் கருத்து மோதல்கள், சலசலப்புகள் உண்டாகும். வி.ஐ.பிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். நெடுநாள்களாக நெருங்கிப் பழகிய நண்பர்கள் கூட நீங்கள் மாறி விட்டதாகக் குறைபட்டுக் கொள்வார்கள்.

குருபகவான் குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பேச்சில் ஒரு நிதானம் பிறக்கும். வராமலிருந்த பணம் கைக்கு வரும். வழக்கில் வெற்றி கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த சந்தேகம் தீர்ந்து ஆரோக்கியமான விவாதங்கள் வந்து நீங்கும். தாம்பத்யம் இனிக்கும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலை கிடைக்கும். டிரஸ்ட் தொடங்குவீர்கள். கௌரவப்பதவிகள் தேடி வரும். சொந்த ஊரில் உங்களின் செல்வாக்கு கூடும். சூழ்ச்சியால் உத்தியோகத்தில் பதவியுயர்வை  இழந்தீர்களே! இனி அதிக சம்பளத்துடன் பதவியுயரும்.

குரு 12-ம் வீட்டை பார்ப்பதால் வீண் செலவுகளையெல்லாம் கட்டுப்படுத்துவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். தள்ளிப்போன உங்கள் மகளின் கல்யாணத்தை வி.ஐ.பிகள் முன்னிலையில் நடத்துவீர்கள். அரைகுறையாக நின்று போன கட்டடப் பணிகளை இனி முழு மூச்சுடன் முடிப்பீர்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள். சிலர் வேறு கட்சிக்கு மாறுவார்கள். சகாக்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:


1.5.24 முதல் 12.6.24 வரை உங்களின் பாக்கியாதிபதி சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்குக் கூடும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. புதிய வேலை கிடைக்கும். தந்தை உதவுவார். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். திருமணம், சீமந்தம், காதுகுத்து என்று வீடு களைகட்டும். அரசால் ஆதாயமுண்டு. பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டிற்குப் புதிய சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள்.

12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25 வரை உங்களின் அஷ்டமாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் வீண் அலைச்சல்கள் அதிகரித்துக் கொண்டே போகும். திடீர் பயணங்கள், வீண் செலவுகள் என அதிகரித்து மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். சிறு சிறு விபத்துகள், உடல்நலக்குறைவுகள் வந்து போகும். வழக்கில் அலட்சியம் வேண்டாம்.

19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை உங்களின் பூர்வ புண்ணிய விரையாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். மகனுக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். வீடு மனை வாங்கும் வாய்ப்பு அமையும். பெயர், புகழ் கௌரவம் கூடும்.

வியாபாரம் : பெரிய முதலீடுகளை தவிர்த்துவிட்டு, இருப்பதை வைத்து முன்னேறப் பாருங்கள்.  எவ்வளவு அள்ளித்தந்தாலும் வேலையாட்கள் நன்றியில்லாமல் இருக்கிறார்களே என உணர்ச்சிவசப்படுவீர்கள். போட்டிகள் அதிகரிக்கத் தான் செய்யும். பாக்கிகளை அலைந்து வசூலிப்பீர்கள். உங்களின் அன்பான பேச்சால் புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். இரும்பு, கெமிக்கல், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் உண்டு. மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று தெரியாத துறையில் இறங்க வேண்டாம். பங்குதாரர்கள் எடுத்தெறிந்துப் பேசினாலும், ஆத்திரப் படாதீர்கள்.
 
உத்தியோகம் : பல வேலைகளை நீங்களே பார்க்க வேண்டி வரும். ஆனால் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். காத்திருந்த பதவியுயர்வு, சம்பளயுயர்வு எல்லாம் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உங்கள் இருக்கைத் தேடி வரும். வெளிநாட்டுத்தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். கணினித் துறையினர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும்.
கலைஞர்களே! இழந்த புகழை மீண்டும் பெற யதார்த்தமான படைப்புகளைக் கொடுங்கள். அரசு பாராட்டும். வெளிநாட்டு நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.
 
இந்த குரு மாற்றம் அவ்வப்போது உங்களை அலைகழித்தாலும் மறைமுக வெற்றியையும் தருவதாக அமையும்.

மகரம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்
கடுமையாக உழைத்தால் வாழ்வில் நிச்சயம் முன்னுக்கு வந்துவிடலாம் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் மகர ராசிக்காரர்கள். உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் வரையிலான நட்சத்திரங்களைக் கொண்ட மகர ராசிக்காரர்கள் எடுக்கும் வேலையை மின்னல் வேகத்தில் முடிக்கும் தன்மை கொண்டவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படிப்பட்ட மாற்றங்களைக் கொடுக்கும் என்பதைப் பார்ப்போம்.

இதுவரை உங்கள் சுகவீடான 4 - ல் அமர்ந்து எந்த சுகங்களையும் அனுபவிக்க முடியாமல் தடுத்ததுடன், பலவகையில் பாடாய்படுத்திய குருபகவான் 1.5.24 முதல் 14.5.25 வரை 5-ம் வீட்டில் நுழைந்து அள்ளிக் கொடுப்பதுடன்,வாழ்க்கைக்கு அஸ்திவாரத்தையும் அமைத்துத் தருவார்.

குடும்பத்தில் எப்போதும் சண்டை சச்சரவும், வாக்குவாதமும் இருந்ததே! ஒரே வீட்டுக்குள் ஒட்டுறவு இல்லாமல் பிரிந்துதானே இருந்தீர்கள். அந்த நிலை மாறும். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளை இல்லையே என்று ஏங்கித்தவித்த தம்பதியருக்கு கண்ணுக்கழகான குழந்தை பிறக்கும். படுத்த படுக்கையாய் இருந்த தாய் எழுந்து நடப்பார். நண்பர்கள், உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். கல்யாண நிகழ்ச்சிகளில் ஒதுக்கப்பட்டீர்களே! இனி முதல் மரியாதை கிடைக்கும். இனி உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். குலதெய்வக் கோயிலுக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை இப்போது நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.

குரு உங்கள் ராசியை பார்ப்பதால் எதையோ இழந்ததைப்போல் இருந்த உங்கள் முகம் மலரும். குரு உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் தந்தையாருடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். அவர்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பதினோறாவது வீட்டை குரு பார்ப்பதால் மூத்த சகோதரர், சகோதரிகளுடன் இருந்து வந்த பனிப்போர் நீங்கி, பாசமழை பொழிவார்கள். இழுபறியான வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். மனைவிக்கு விலையுயர்ந்த பட்டுப்புடவை, தங்க ஆபரணம் வாங்கித்தருவீர்கள். அரசியவாதிகள் இழந்த பதவியை மீண்டும் பெறுவார்கள். கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாமலிருப்பது நல்லது.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

1.5.24 முதல் 12.6.24 வரை சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்கள் வீட்டு விஷேசங்களை எடுத்து நடத்துவீர்கள். தொலை தூரப் பயணங்கள் உண்டு. வேற்று மதத்தினர், மொழியினர் உதவுவார்கள். ஆனால் சிறு சிறு விபத்துகள் வந்து போகும். அரசுக் காரியங்களில் அலட்சியம் வேண்டாம்.
 
12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25 வரை சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் செல்வாக்கு கூடும். இழுபறியான வேலைகள் உடனே முடியும். சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு உடல்நிலை சீராகும். மனைவி வழி உறவினருடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். வாகனம் அமையும். வசதியான வீட்டிற்கு இடமாறுவீர்கள். பிள்ளைபாக்கியம் கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டு. ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் மூத்த சகோதரர் உதவுவார். புது வாகனம், சொத்து அமையும். வி.ஐ.பிகள் ஆதரவால் பெரிய பதவியில் அமர்வீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். செல்வாக்குக் கூடும்

வியாபாரம் : புதிது புதிதாக வந்த போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே! இனி அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புதிய முதலீடுகள் போடுவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்கள் இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கணினி, உணவு, எண்டர்பிரைஸ், கமிசன் வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.
 
உத்தியோகம் : உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்களின் இனி நட்புறவாடுவார்கள். வேலைச்சுமை குறையும். மேலதிகாரியுடனான பனிப்போர் நீங்கும். கல்வித்தகுதியை உயர்த்திக் கொள்வீர்கள்.  நீண்டநாளாக எதிர்பார்த்த பதவி உயர்வு தேடி வரும். கணினித் துறையினர்களுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைஞர்களே! மறைந்திருந்த தகுதியை வெளிப்படுத்துவீர்கள். நாடாளுபவர்களின் கரங்களால் பரிசு கிடைக்கும்.

ஆகமொத்தம் இந்த குருப்பெயர்ச்சி பிரச்னைகளால் சிதறிக்கிடந்த உங்களைச் சீர்செய்வதுடன் மனமகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

கும்பம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்
ஊரே கூடி நின்று ஒரு கருத்தைச் சொன்னாலும் தனக்கெனத் தனிக்கருத்து உடையவர்கள் கும்பராசிக்காரர்கள். இவர்களுக்குள் ஆயிரம் ரகசியங்கள் ஒளிந்துகிடக்கும். எளிதாக யாரும் அதை அறிந்துகொண்டுவிட முடியாது. அவிட்டம் 3-ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் வரையிலான நட்சத்திரங்களைத் தன்னகத்தே கொண்ட கும்பராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படி அமையும் என்பதைக் காண்போம்.

இதுவரை முயற்சி வீடான மூன்றாம் வீட்டில் அமர்ந்துகொண்டு, உங்களை முடக்கி வைத்த குரு பகவான் இப்போது 1.5.24 முதல் 14.5.25 வரை நான்காவது வீட்டில் அமர்வதால் நீங்கள் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். உங்கள் ராசிக்கு 2 மற்றும் 11-ம் வீட்டிற்குரிய கிரகம் குரு பகவான் என்பதால் தீயபலன்கள் குறையும். என்றாலும் அலைச்சல் இருக்கும். சேமிப்புகள் கரையும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டை சச்சரவுகள் வரும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள்.

அம்மாவுக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும். நீண்ட தூர, இரவுநேரப் பயணங்களைத் தவிர்க்கப்பாருங்கள். வாகன விபத்துகள் வரக்கூடும். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்துப் போங்கள். காலில் அடிபடும். நீர், நெருப்பு, மின்சாரத்தை கவனமாகக் கையாளுங்கள். வீண் சந்தேகத்தால் கணவன் - மனைவி பிரிய வேண்டி வரும்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்

குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் உதவியுண்டு. பிள்ளைகளை அன்பாக நடத்துங்கள். அவர்ளின் உடல்நலத்தில் கவனம் தேவை. உயர் கல்வி,உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிவார்கள். உணவு விஷயங்களில் கட்டுபாடு தேவை. நேரந்தவறி சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சொத்து வாங்குவது விற்பதில் உஷாராக இருங்கள்.

உங்களின் 10-ம் வீட்டை குரு பார்ப்பதால் உத்தியோகத்தில் மகிழ்ச்சி தங்கும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். புது வாகனம் வாங்குவீர்கள். எந்தப் பிரச்னைக்காவும் நீதிமன்றம் போகாமல் லாபமோ நஷ்டமோ பேசித் தீர்த்துக்கொள்ளப் பாருங்கள். உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டை குரு பார்ப்பதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகக் காரியங்களுக்காகவும் அதிகம் செலவு செய்வீர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகா, தியானம் செய்யுங்கள். அரசியல்வாதிகள் ஆதாரமின்றி யாரையும் விமர்சிக்க வேண்டாம். அண்டை அயலாரை அரவணைத்துப் போங்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

1.5.24 முதல் 12.6.24 வரை சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் அக்கறை தேவை. உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும். அரசுக் காரியங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் பகை வந்து நீங்கும்.
 
12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25 வரை சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் செலவுகள் கூடிக் கொண்டே போகும். சின்ன சின்ன விபத்துகள் ஏற்படக் கூடும். வயிற்றுவலி, யூரினரி இன்பெக்ஷன், நெஞ்சுவலி வந்து போகும். பயணங்களும், வேலைச்சுமையும் அதிகரிக்கும். ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வழக்கால் அலைக்கழிக்கப்படுவீர்கள். குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். கடனை நினைத்து அவப்போது அச்சப்படுவீர்கள். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். வம்பு சண்டைகள் வரும்.

19.8.2024 முதல் 2.12.2024 வரை மற்றும் 5.4.2025 முதல் 14.5.2025 வரை செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் இளைய சகோதர வகையில் உதவியுண்டு. சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேலை மாறுவீர்கள். மறைமுக எதிரிக்கு தகுந்த பதிலடி கொடுப்பீர்கள்.

வியாபாரம் : தொழிலை விரிவுபடுத்தலாம். லாபம் குறையாது. ஆனால் வேலையாட்கள் அவ்வப்போது குடைச்சல் கொடுப்பார்கள். அவர்களிடம் தொழில் ரகசியங்களைச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தப் புதிய அனுகுமுறைகளைக் கையாளுங்கள். கெமிக்கல், பர்னிச்சர் வகைகளால் ஆதாயமுண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் கொஞ்சம் முரண்பாடாகப் பேசுவார்கள். வளைந்து கொடுத்துப் போங்கள்.

உத்தியோகம் : வேலைச்சுமை இருக்கும். உங்களுக்கு எதிராகச் சிலர் குற்றச்சாட்டுகளை வைப்பார்கள். மேலதிகாரியிடம் மனஸ்தாபங்கள் வெடிக்கும். பணியில் திடீர் இடமாற்றம் உண்டு. குருபகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் சவால்களை சமாளிப்பீர்கள். ஆனாலும் அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை உருவாகும். கணினித் துறையினருக்கு வேறு நல்ல வாய்ப்புகள் அமையும். கலைத்துறையினரே! புது வாய்ப்புகள் தடைப்பட்டு வரும்.

இந்த குரு மாற்றம் உங்களைச் சிலநேரங்களில் அலைக்கழித்தாலும், இறுதியில் நினைத்ததை முடிக்கும் வல்லமையை தரும்.

மீனம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்
நம்பிக்கையோடு முன்னேறினால் மலையும் மடுதான் என்று நினைப்பவர்கள் மீனராசிக்காரர்கள். இவர்களின் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் வெளியே சொல்லவேமாட்டார்கள். இறைநம்பிக்கை மிகுந்தவர்கள். அதேவேளையில் அடுத்தவர்களை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்கமாட்டார்கள். பூரட்டாதி 4-ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரையிலான நட்சத்திரங்களை உள்ளடக்கிய மீனராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களைக் கொடுக்கும் என்பதைப் பார்ப்போம்.

இதுவரை உங்களின் தன வீடான 2-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு பணப்புழக்கத்தையும், கௌரவத்தையும், குடும்பத்தில் அமைதியையும் தந்த குருபகவான் இப்போது 1.5.24 முதல் 14.5.25 வரை மூன்றாவது வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கிறார். மூன்றாம் வீட்டில் உங்கள் ராசிநாதன் மறைவதால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் செயல்படவேண்டும்.  

வசதி, செல்வாக்கைக் கண்டு மயங்கித் தவறானவர்களுடன் சென்றுவிடவேண்டாம். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது. யாரையும் அநாவசியமாக வீட்டிற்குள் அழைத்து வரவேண்டாம். இளைய சகோதரருடன் உரசல் போக்கு வந்து நீங்கும். என்றாலும் உங்களின் ஏழாவது வீட்டை குரு பார்ப்பதால் மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கணவன் - மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அந்நியோன்யமும் குறையாது.

குருபகவானின் பார்வைப் பலன்கள்

குருபகவான் உங்களின் ஒன்பதாவது வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடன் பைசலாகும். தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கிப் பாசம் கூடும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். உங்கள் பேச்சுக்குக் கட்டுப்படுவார்கள். மகனின் உயர்கல்வியை எதிர்பார்த்த கல்வி நிறுவனத்திலேயே படிக்க வைப்பீர்கள். மகளுக்கு உங்கள் வசதிக்கும், அந்தஸ்துக்கும் தகுந்த மணமகன் அமைவார். என்றாலும் உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டுத் தொந்தரவு தருவார்கள்.

குரு 11 -வது வீட்டைப் பார்ப்பதால் காரியத்தடைகள் விலகும். பிரபலங்களால் பாராட்டப்படுவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். சொத்துப் பிரச்சனைகள் சுமுகமாக முடியும். அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப்படுவார்கள். மேலிடத்தை அனுசரித்துப் போங்கள். வாகனத்தை இயக்கும்போது செல்போனில் பேசவேண்டாம்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

1.5.24 முதல் 12.6.24 வரை சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் செலவுகளும், பயணங்களும் அதிகரிக்கும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். பிரச்னைகளைப் பேசித்தீர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25 வரை சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் பிள்ளை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து ஒருபடி உயரும். வேலை கிடைக்கும். பிரபலங்களால் ஆதாயமுண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். புது ஆடை, ஆபரணம், வாகனம் வாங்குவீர்கள். சொத்து சேரும். வீடு மாறுவீர்கள்.

19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் தந்தை வழியில் நிம்மதியுண்டு. ஓரளவு பணம் வரும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பழைய நண்பர்களால் ஆதாயமுண்டு. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

வியாபாரம் : மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நட்டப்படாதீர்கள். வருங்காலச் சந்தை நிலவரத்தை கவனத்தில் கொண்டு புது முதலீடு செய்யுங்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளை போராடி விற்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் கறாராக நடந்து கொள்ளாமல் கனிவாகப் பேசி பழைய பாக்கிகளை வசூலியுங்கள். கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் உண்டு. ஸ்டேஷ்னரி, ஹோட்டல், விடுதிகள், கமிசன் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகம் : மேலதிகாரியுடன் வீண் விவாதங்கள் வரும். என்றாலும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகள் ஒப்படைப்பார்கள். ஆனால் சக ஊழியர்கள் உங்களை மட்டம்தட்டிப் பேசுவார்கள். அவர்களிடம் உஷாராக பழகுங்கள். சிலர் எதிர்பாராத இடத்திற்கு மாற்றப்படுவீர்கள். சிலர் அடிப்படை உரிமை வேண்டி நீதிமன்றம் செல்ல வேண்டி வரும். வேலைச்சுமை குறையும். கணினித் துறையினர்களுக்குப் புதிய சலுகைகள் கிடைக்கும். அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டாம். கலைஞர்களே! பெரிய வாய்ப்புக்காகக் காத்திருக்காமால் கிடைக்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள்.

இந்த குரு மாற்றம் வேலைச்சுமை, அலைச்சல், சிறுசிறு ஏமாற்றங்களை தந்தாலும், உங்களை பதப்படுத்தி வெற்றி பெற வைக்கும்.