மன்னார் மனித புதைகுழி தொடர்பில் முக்கிய தீர்மானம்!

மன்னார் சதோச மனித புதைகுழி வழக்குத் தொடர்பில் சில தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக” வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக நீதிமன்றின் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை(5) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ‘மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை(5) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது ஏற்கனவே அழைக்கப்பட்ட சட்டத்தரணிகள் பிரசன்னமாகி இருந்த நிலையில், மன்னார் நீதிமன்ற நீதவான் மற்றும் அழைக்கப்பட்ட நிறுவனத்தினரும் குறித்த சதோச மனித புதைகுழி பகுதியை இன்றைய தினம் வியாழக்கிழமை (5) காலை நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
இதன் போது சில தீர்மானங்களுக்கு முன்வந்தார்கள். குறித்த புதைகுழி பிரதேசத்தை சுத்தப்படுத்துவதாகவும், நிறம்பியுள்ள நீரை அகற்றுவதற்கு நகர சபை இணக்கம் தெரிவித்துள்ளதன் அடிப்படையில் குறித்த நீரை அகற்றுவது என்றும், குறித்த புதைகுழியை பகுதி அளவில் மூடுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது ஏற்கனவே எடுக்கப்பட்ட மண் சதோச நிறுவனத்திடம் காணப்படுகின்றதா?அது எங்கே இருக்கிறது போன்ற விடையங்களை பொலிஸார் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், இந்த வழங்கு மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி இடம்பெறவுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.