வடமத்திய மாகாண ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளை தடுத்து வைத்த 22 பட்டதாரிகள் கைது!

வடமத்திய மாகாண ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளை தடுத்து வைத்த 22 பட்டதாரிகள் கைது!

மாகாண சபை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மாகாண சபை கட்டிட வளாகத்திற்குள் அடைத்து, நுழைவு மற்றும் வெளியேறும் கதவுகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 22 வேலையற்ற பட்டதாரிகள் இன்று (6) கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகளே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது கைதுசெய்யப்பட்டவர்களில் அகில இலங்கை ஐக்கிய தொழிலற்ற பட்டதாரிகள் சங்கத்தின் முன்னாள் அழைப்பாளர் தம்மிக்க முனசிங்க உட்பட 11 ஆண்களும் 11 பெண்களும் அடங்குவர்.

பொலன்னறுவை, வெலிகந்த போன்ற தொலைதூர பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் சிறு குழந்தைகளுடன் இந்த இடத்திற்கு வந்துள்ளனர், 

மேலும் வடமத்திய மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களை விட மாகாணத்தில் தொழிலற்ற பட்டதாரிகள் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு ஏன் வேலை வழங்கப்படவில்லை என இக்குழுவினர் கேள்வி எழுப்பினர்.

இன்று (6) காலை பத்து மணியளவில் மாகாண சபையின் பிரதான வாயில் ஊடாக மாகாண சபை வளாகத்தினுள் நுழைந்த இவர்கள் வடமத்திய மாகாண சபையின் அனைத்து நுழைவாயில்கள் மற்றும் வெளியேறுகளை அடைத்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.