வருகை முன்னுரிமை அடிப்படையில் இன்று முதல் கடவுச்சீட்டு விநியோகம்!

வருகை முன்னுரிமை அடிப்படையில் இன்று முதல் கடவுச்சீட்டு விநியோகம்!

நேரம் மற்றும் திகதியை முன்கூட்டியே பதிவு செய்து கடவுச்சீட்டுக்களை வழங்கும் முறை இன்று (28) முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக வருகை முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய முறையின் மூலம் நாளொன்றுக்கு 750 கடவுச்சீட்டுகளை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடவுச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமையினால் நேற்று (27)  காலை குடிவரவு திணைக்களத்திற்கு முன்பாக திரண்ட பெருமளவான மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டதன் காரணமாகவே இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் திரண்ட உணவு, மலசலக்கூடம் உள்ளிட்ட வசதிகளின்றி நீண்ட நாட்களாக வரிசையில் காத்திருப்பதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில், கடவுச்சீட்டுகளின் மட்டுப்படுத்தப்பட்ட விநியோகம் காரணமாக இந்த கட்டுப்பாடு அவசியமானது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விளக்கமளித்துள்ளது.

இதன்படி, முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது. 

அதேவேளை, புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக வெளிநாட்டு நிறுவனமொன்றிடமிருந்து விலை மனு பெறப்பட்டுள்ளதாகவும் டிரான் அலஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.