குவைத்தில் கைதான இலங்கையர்கள் விடுவிப்பு!

குவைத்தில் கைதான இலங்கையர்கள் விடுவிப்பு!

குவைத்தில் கடந்த 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டினால் குறித்த குழுவினர் நேற்று (03) இரவு விடுவிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திரச்சாப்பா லியனகே, சமனலி பொன்சேகா, ஜோலி சியா, உபேகா நிர்மானி உள்ளிட்ட 26 பேர் குவைத் பொலிஸாரால் கடந்த 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

‘எதேர அபி’ என்ற அமைப்பினால் நடத்தப்படவிருந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டனர்.

இசை நிகழ்ச்சிக்கு உரிய அனுமதி பெறாததால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, பாடகர்களைத் தவிர, இசை நிகழ்ச்சிக்கு வந்த இசைக்குழுவினர் மற்றும் அதனை ஏற்பாடு செய்தவர்கள், இசைக்குழுவின் இசைக்கருவிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், குவைத்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளின் தலையீட்டின் பேரில், இவர்களில் 24 பேர் நேற்றிரவு விடுவிக்கப்பட்டதாகவும், ஏற்பாட்டுக் குழுவில் இருவர் இன்னும் பொலிஸ் காவலில் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.