இலங்கையில் வாகன விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையில் வாகன விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கைக்குப் பொருத்தமற்ற வாகனங்களைக் கொள்வனவு செய்தமையே வாகன இறக்குமதிக்கானத் தடைக்கு காரணமாகும் என வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

பாவனை செய்யப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்து அவற்றின் திருத்தப் பணிகளுக்காக அதிகம் செலவழிப்பதாலேயே வாகனங்களின் விலை அதிகரிக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை போன்ற நாடுகளுக்கு குறைந்த விலையில் சிறந்த வாகனங்களைக் கொள்வனவு செய்யலாம். அவ்வாறு இடம்பெறாமையே இங்கு பிரச்சினையாகியுள்ளது.

2018, 2019 ஆகிய ஆண்டுகளில் நாட்டுக்கு, பாவனை செய்யப்பட்ட வாகனங்களே பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றிலும் ஜப்பானிலிருந்தே அதிகளவான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

அதேநேரம் ஜப்பான் வாகனங்களே தரத்தில் சிறந்தவை. குறைந்த விலைகளோடு தரமான வாகனங்களை இறக்குமதி செய்யலாம். இவ்வாறான பின்னணியில் சில வாகன இறக்குமதியாளர்கள் வாகனங்களின் திருத்தப் பணிகளுக்காக அதிக பணத்தைச் செலவிடுவதாகத் தெரிவிக்கின்றனர்.

ஆகையால் வாகனத்தின் விலை அதிகரிப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நிலையில், உரிய முறையில் குறைந்த விலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்குப் பல சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

எனினும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான முறையான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தவறுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.