தமிழீழ வைப்பகத்தில் அடைவு வைத்த நகைகளை திருப்பி தருமாறு பெண் கோரிக்கை

தமிழீழ வைப்பகத்தில் நகைகளை அடைவு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது , உரிய நகைகளை தம்மிடம் வழங்க வேண்டும் என நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர் ஒருவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் இன்றைய தினம்(31) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், நகைகளை அடகு வைத்தவர்களில் ஒருவரான எஸ். சுந்தராம்பாள் என்பவரே அவ்வாறு கோரிக்கை வைத்துள்ளார்.
குறித்த கோரிக்கையில், உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் புலிகளின் வங்கியில் அடைவு வைக்கப்பட்ட நகைகள் என்று ஒரு தொகுதி தங்க நகைகள் அரசாங்கத்தினால் காண்பிக்கப்பட்டது.
இறுதிக் காலகட்டத்தில் அப்போதைய சந்தைப் பெறுமதிப்படி சுமார் 9 கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் இருந்ததாக சொல்லப்படுகின்ற போதிலும், அந்தளவு நகைகள் தற்போது காண்பிக்கப்படவில்லை.
அதேபோன்று, நகைகளை அடைவு வைத்தவர்கள் அனைவரும் தற்போது இருக்கின்றார்கள் என்பதற்கோ, இருந்தாலும் அவர்களிடம் உரிய ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதோ எதிர்பார்க்க முடியாதது.
எனவே, யாதார்தத்தினை புரிந்து கொண்டு நகைகளை அடைவு வைத்தமைக்கான ஆவணங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு, அவர்கள் அடைவு வைத்த தங்க நகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.
அடைவு நகை விவகாரத்தினை வெறுமனவே தேர்தல் வாக்குறுதியாக கடந்து செல்லாமல் விரைவான நடவடிக்கை முன்வைக்கப்பட வேண்டும் எனவும் குறித்த கோரிக்கையில் அவர் கூறியுள்ளார்.