தையிட்டி விகாரை தீர்வுக்கான கடிதம் சமர்ப்பிப்பு
![தையிட்டி விகாரை தீர்வுக்கான கடிதம் சமர்ப்பிப்பு](https://tamilvisions.com/uploads/images/202502/image_870x_67ab059692612.jpg)
தமிழ் பௌத்த காங்கிரசினர் தையிட்டி விகாரை சம்பந்தமான தீர்வுக்கான கடிதம் ஒன்றினை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் கையளித்துள்ளார்.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தையிட்டி விகாரையானது தமிழ் மக்களுக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த சட்டவிரோத விகாரையை அகற்ற முடியாவிட்டாலும், அதற்கு அருகேயுள்ள மக்களது காணிகளையாவது உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும்.
தையிட்டி விகாரையும், நயினாதீவு விகாரையும் அமரபுரனிகாய என்ற அமைப்பின் கீழ் உள்ளது.
எனவே இந்த விகாரை பிரச்சினைக்கு அந்த அமைப்பு தீர்வு வழங்க வேண்டும்.
நயினாதீவு விகாராதிபதிக்கு சொந்தமான காணி 20 பரப்பு தையிட்டி விகாரைக்கு அருகாமையில் உள்ளது.
அந்த காணி மக்களுக்கு வழங்க வேண்டும். தையிட்டி விகாரைக்கு பின்பக்கமாக 8 ஏக்கர் மக்களது காணிகள் உள்ளன. அந்த காணிகளும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
கீரிமலையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையானது தனக்கு தேவையில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் ஜனாதிபதி மாளிகையை சுற்றுலாத்துறைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையானது சுற்றுலாத்துறைக்கு வழங்குவதால் பல்வேறு விதமான சீரழிவுகள் ஏற்படக்கூடும்.
யாழ். பல்கலைக்கழகத்தின் இந்து சமய பீடம் மற்றும் அரங்க கற்கைகள் பீடத்துக்கு தனியான கட்டடம் இல்லை.
ஆகையால் ஜனாதிபதி மாளிகையில் அந்த பீடங்களை அமைப்பதற்கு வழிசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் பௌத்த காங்கிரசின் தலைவர் கலாநிதி சிதம்பரமோகன், செயலாளர் கந்தையா சிவராஜா ஆகியோர் இணைந்து இந்த கோரிக்கை கடிதத்தை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் கையளித்தனர்.