திருகோணமலை கடலில் நிலை கொண்டுள்ள  தாழமுக்கம் சூறாவளியாக மாற்றம்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான தாழமுக்க மண்டலம் வலுவடைந்து திருகோணமலையில் இருந்து வடகிழக்கு திசையாக 490 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

திருகோணமலை கடலில் நிலை கொண்டுள்ள  தாழமுக்கம் சூறாவளியாக மாற்றம்!

குறித்த தாழமுக்க மண்டலம் எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து நாளை (03) சூறாவளியாக மாற்றமடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்.

சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழையுடனான வானிலை நிலவக்கூடும்.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் காலி முதல் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடுபவர்களை அவதானத்துடன் செயற்பாடுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.