டிரான் அலஸின் சர்ச்சைக்குரிய கடவுச்சீட்டு திட்டம் தொடர்பில் புதிய அரசாங்கத்தின் தீர்மானம்!

டிரான் அலஸின் சர்ச்சைக்குரிய கடவுச்சீட்டு திட்டம் தொடர்பில் புதிய அரசாங்கத்தின் தீர்மானம்!

கடவுச்சீட்டுக்கள் தொடர்பான முந்தைய அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய திட்டத்தை புதிய அரசாங்கம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவானது, கடவுச்சீட்டுக்களின் பற்றாக்குறையை தீர்ப்பதற்காகவே எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thales DIS Finland Oy நிறுவனம் மற்றும் அதன் இலங்கை முகவரான Just In Time (JIT) Technologies (Pvt) ஆகியவற்றின் கூட்டமைப்பிலிருந்து எண் வரிசை இயந்திரம் படிக்கக்கூடிய கடவுச்சீட்டுகளை அவசரமாகப் பெறுவதற்கான கடந்த நிர்வாகத்தின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

எனினும், இந்த முடிவை மாற்றினால், இலங்கை குடிவரவுத்திணைக்களத்திடம் கடவுச்சீட்டுக்களின் கையிருப்பு இருக்காது. எனவே, சரியோ தவறோ, செயல்முறை தொடரும் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

இதன்படி, 2024 ஒக்டோபர் 15 மற்றும் 20ஆம் திகதிகளுக்கு இடையில் 47,500 கடவுச்சீட்டுக்களை Thales நிறுவனம் இலங்கைக்கு வழங்கவுள்ளது. நவம்பர் இறுதியில் 100,000 கடவுச்சீட்டுக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

எந்தவொரு புதிய கடவுச்சீட்டையும் உலகெங்கிலும் உள்ள எல்லை அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்னர், அதன் நகல்களை சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்புக்கு முன்கூட்டியே அனுப்ப வேண்டும்.

இருப்பினும், புதிய கடவுச்சீட்டின் மாதிரிகளை இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு Thales நிறுவனம் இன்னும் வழங்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், முந்தைய அமைச்சரவையால் அனுமதிக்கப்பட்ட 750,000 கடவுச்சீட்டுகளையும் Thales இடமிருந்து இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்யும். இதற்கான 3.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன.