டொனால்ட் ட்ரம்ப்பை நினைத்தாலே பயமாக இருக்கிறது - ஜோ பைடனின் பிரசார யுக்தி கேள்விக்குறி?

டொனால்ட் ட்ரம்ப்பை நினைத்தாலே பயமாக இருக்கிறது - ஜோ பைடனின் பிரசார யுக்தி கேள்விக்குறி?

அமெரிக்காவில் இந்த ஆண்டின் இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான கருத்துக் கணிப்புகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடவுள்ளதுடன், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் களமிறங்கியுள்ளார். 

அக்கட்சியின் வேட்பாளர் தேர்வில், ட்ரம்புக்கு அதிக ஆதரவுள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அவர் போட்டியிட்டால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே ஜோ பைடனின் பிரசார யுக்தி குறித்து முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கேள்வி எழுப்பினார். டிரம்பின் முன்னேற்றம் குறித்து கவலை தெரிவித்த அவர், பைடன் தரப்பு பிரசாரத் திட்டத்தை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

இந்த நிலையில், அமெரிக்க துணை தலைவரான கமலா ஹாரிஸ் பங்கேற்ற நிகழ்ச்சியொன்றில்  கருத்து தெரிவிக்கையில், “டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்புவார் என்று நினைத்தாலே எனக்கு பயமாக உள்ளது. 

இதனால்தான் நான் நாடு முழுவதும் பயணம் செய்து பிரசாரம் செய்கிறேன். ட்ரம்ப் ஜனாதிபதியாவது பற்றி நாம் அனைவரும் பயப்பட வேண்டும். 

நாம் பயப்படும்போது அதற்கு எதிராக நாம் போராட வேண்டும். நம் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பயப்படும்போது, நாம் இழுத்து போர்த்திக்கொண்டு உறங்குவோமா, இல்லையே, நம்மால் முடியாது. 

ஜனநாயக கட்சியினரை மீண்டும் போராட அழைப்பு விடுக்கிறேன்.” என கமலா ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார்.