மரக்காலை உரிமையாளர் மீது பணிபுரியாளர் இளைஞன் தாக்குதல்!

புதுக்குடியிருப்பு - இரணைப்பாலை பகுதியில் அமைந்துள்ள மரக்காலையின் உரிமையாளர் மீது மரக்காலையில் பணிபுரியும் இளைஞன் ஒருவர் தாக்குதல் நடாத்திய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இரணைப்பாலை வீதி சிவநகர் பகுதியில் அமைந்துள்ள மரக்காலையில் பணிபுரியும் ஊழியரால் மரக்காலை உரிமையாளர் மீது அதிகாலை 2 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. 

தாக்குதலுக்கு உள்ளான மல்லிகைத்தீவினை சேர்ந்த மரக்காலை உரிமையாளர் வேலுப்பிள்ளை வரதகுமார் (35 வயது) யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் நேற்றையதினம் (27) மரக்காலை உரிமையாளர் குறித்த இளைஞனை இரவு தொழில் செய்யுமாறு கூறியுள்ளார். 

அப்போது குறித்த இளைஞன் தன்னால் வேலை செய்யமுடியாது என கூறியுள்ளார். 

அதற்கு உரிமையாளர் குறித்த இளைஞனை வெளியில் போகுமாறு அனுப்பியுள்ளார்.

பின்னர் குறித்த இளைஞன் அதிகாலை மரக்காலைக்குள் மதுபோதையில் புகுந்து உறங்கிக் கொண்டிருந்த உரிமையாளர் மீது தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்த ஏனையவர்களை எழுப்பி உரிமையாளரை தாக்கிவிட்டேன் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுங்கள் என சொல்லிவிட்டு தப்பித்து சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனையடுத்து அதிரடியாக செயற்பட்ட புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய குழுவினரால் குறித்த நபரை தாக்கிவிட்டு தப்பித்து சென்ற போது சிலாவத்தை பகுதியில் வைத்து சந்தேகநபரை கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞனாவார். 

இவருக்கு உடந்தையாக இருந்த இளைஞர் ஒருவரையும் பொலிஸார் தேடி வருவதோடு இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.