வட்டுக்கோட்டையில் உயிரிழந்த கைதியின் மரணம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு!

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் இளைஞரின் மரணம் தொடர்பில், வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டையில் உயிரிழந்த கைதியின் மரணம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு!

யாழ்ப்பாண நீதவான், யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு நேரில் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளார். 

உயிரிழந்த இளைஞனுடன் கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞனிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக நாளை மறுதினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரின் கைது செய்யப்பட்ட சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்ற 26 வயதுடைய இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை உயிரிழந்தார்.

குறித்த இளைஞரின் உயிரிழப்பு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற அதிகார எல்லைக்குள் இடம்பெற்றமையால், இளைஞனின் உயிரிழப்பு தொடர்பிலான விசாரணைகள் யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்று வருகின்றன. 

இளைஞரின் சடலம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனைகள் நேற்று முன்தினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. 

அதன்போது, நீதவான் வைத்தியசாலைக்கு நேரில் சென்று சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். 

இதனைத் தொடர்ந்து சிறைச்சாலைக்கு நேரில் சென்று சிறைச்சாலை அத்தியட்சகர், உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களிடமும் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டார்.