யாழ்ப்பாணத்தில் "கறுப்பு ஐனவரி" நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

இலங்கையில் பல வகைகளில் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமைக்கும் நீதி கோரி "கறுப்பு ஐனவரி நினைவேந்தலும், கலந்துரையாடலும்” யாழ்ப்பாணத்தில் நேற்று (26) நடைபெற்றது.

பல்வேறு ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் கொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை என்பவற்றுக்கு நீதி கோரி, வருடம் தோறும் ஜனவரி மாதம் ‘கறுப்பு ஜனவரி’யாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாண ஊடக அமையத்தின் தலைமையில் சுதந்திர ஊடக இயக்கத்தின் பங்கெடுப்பில் குறித்த நினைவேந்தல் மற்றும் கலந்துரையாடல் நேற்று மதியம் 2 மணியளவில் யாழ் நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. 

இதன்போது ஊடக சுதந்திரம், நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பன ஊடகங்களில் செலுத்தவுள்ள தாக்கம் தொடர்பாகவும் சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், துறைசார் நிபுணர்களின் உரைகளும் இடம்பெற்றன.

இதனிடையே, கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

நினைவேந்தலில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.