கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் : 4454 இலங்கையர்கள் பங்கேற்பு - இந்தியர்கள் புறக்கணிப்பு!

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (23) ஆரம்பமாகிய நிலையில், 4454 இலங்கையர்கள் பங்கேற்றதுடன், இந்தியர்கள் குறிப்பாக தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் மாத்திரமன்றி இந்திய பக்தர்களும் இணைந்து வருடம்தோறும் வெகு விமர்சையாக இடம்பெறும்  கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

நேற்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவில் சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன  இடம்பெற்றன.

வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு இன்று காலை 7 மணிக்கு  யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த திருவிழாவிற்கு இலங்கையில் இருந்து  4454 பக்தர்கள்  கலந்து கொண்டனர். இந்திய பக்தர்கள் மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி எவரும் வருகை தரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறித்த திருவிழாவில் கடற்படை உயர் அதிகாரிகள், ஜனாதிபதியின் செயலாளர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.