ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள் வலம்வரவுள்ளன - ஜூன் 3ஆம் திகதி வானில் நிகழவுள்ள அதிசயம்....

ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள் வலம்வரவுள்ளன - ஜூன் 3ஆம் திகதி வானில் நிகழவுள்ள அதிசயம்....

எதிர்வரும் ஜூன் 3ஆம் திகதி 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வருவதை பூமியில் இருந்து பார்க்க முடியும் என சென்னை பிர்லா கோளரங்க இயக்குநர் லெனின் தமிழ்கோவன் தெரிவித்துள்ளார்.

சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. கோள்களின் சுற்றுவட்டப் பாதையில் ஒன்றை ஒன்று சந்திக்கும் அபூர்வ நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்கின்றன.

அந்த வகையில் எதிர்வரும் ஜூன் 3ஆம் திகதி ஒரு அரிய காட்சி வானில் அரங்கேற இருப்பதாக, சென்னை பிர்லா கோளரங்க இயக்குநர் லெனின் தமிழ்கோவன் தெரிவித்துள்ளார்.

ஒரே நேர்கோட்டில் வரும் 6 கோள்கள்

கிழக்கு திசையில் சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அடி வானில் வியாழன், புதன், யுரேனஸ், செவ்வாய், நெப்டியூன், சனி என்ற வரிசையில் 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வருவதை பூமியில் இருந்து பார்க்க முடியும்.

இதில் யுரேனஸ், நெப்டியூன், புதன் ஆகியன சற்று தூரமாக இருப்பதனால் இதனைப் பார்ப்பது கடினம் என அவர் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் வானம் தெளிவாக இருந்தால் கடற்கரைப் பகுதிகளில் இதனைப் பார்க்க முடியும் எனவும், அவ்வாறு ஒரே வரிசையிலும் ஒரே நேர்கோட்டிலும் 6 கோள்கள் அணிவகுத்து வருவது மிக அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.