கனடாவில் இலங்கையர்கள் 6 பேர் படுகொலை -  தவறாக குறிப்பிடப்பட்ட சந்தேக நபர் பெயர்!

கனடாவில் இலங்கையர்கள் 6 பேர் படுகொலை -  தவறாக குறிப்பிடப்பட்ட சந்தேக நபர் பெயர்!

கனடாவில் 6 இலங்கையர்களையும் படுகொலை செய்ய வேட்டையாடும் கத்திக்கு ஒத்த கத்தியையே சந்தேகநபர் கொலைக்கு பயன்படுத்தியுள்ளதாக ஒட்டாவா காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், இலங்கையர்கள் ஆறு பேரையும் கொலை செய்ய சந்தேகநபர் ஒரு கத்தியினை பயன்படுத்தினாரா அல்லது பல கத்திகள் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், படுகொலைச் சம்பவத்தின் சந்தேகநபரான 19 வயதான இலங்கையைச் சேர்ந்த பேப்ரியோ டி சொய்சா எதிர்வரும் வியாழக்கிழமை ஒட்டாவா நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் ஒட்டாவா காவல்துறையினர் பல தவறான தகவல்களை வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை இரவு கனடாவின் ஒட்டாவா பகுதியில் இலங்கையை சேர்ந்த தாயும், அவரது நான்கு குழந்தைகளும் மற்றுமொரு இலங்கையரும் கொல்லப்பட்டதுடன் பெண்ணின் கணவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தை துப்பாக்கிச்சூடு என்று ஒட்டாவா காவல்துறையினர் முதலில் தவறாக தகவல் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறை ஊடக சந்திப்பின் போது சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 19 வயதுடைய சந்தேகநபரின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இறந்தவர்களின் பெயர் பட்டியலை மூன்று முறை சரி செய்து, மூன்றாவது மின்னஞ்சல் செய்தியில் இருந்து இறுதி பெயர் பட்டியல் பெறப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்த தவறுகளை ஒப்புக்கொண்ட ஒட்டாவா காவல்துறை, கொலை விசாரணைகள் மிகவும் சிக்கலானது என்றும், அவ்வப்போது தகவல்கள் மாறுவதாகவும் கூறியுள்ளனர்.