பாலீஸ்வரர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா

பாலீஸ்வரர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா

மட்டக்களப்பில் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாழைச்சேனை பேத்தாழை பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலய வருடாந்த பிரமோற்சவத்தின் 9 ஆவது நாளான இன்று வியாழக்கிழமை தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி காலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூசைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுவாமி அம்பாள் தேரில் எழுந்தருளி பக்தர்கள் பக்தி கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரானது ஆலயத்தை சுற்றியதுடன் ஊரில் உள்ள முதியோர்கள்,மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆலயத்திற்கு சென்று இறைவனை தரிசனம் செய்ய முடியாதவர்களுக்கு தரிசனம் வழங்குவதற்காக ஊரை சுற்றி வலம் வந்தது.

ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேரானது பாடசாலை வீதி வழி மற்றும் பாசிக்குடா வீதி வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு கடந்த புதன் கிழமை 2 ஆம் திகதியன்று கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் ஆரம்பமானது.

பிரமோற்சவத்தின் 7ஆவது நாள் திரிசூல வேட்டைத் திருவிழா இடம்பெற்றது. நாளை வெள்ளிக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறவுள்ளது.

பூசைகள் யாவும் பிரதம குருபிரதிஸ்டா பூசணம்,ஜோதிட ரத்னாகரம்,வேத ஆகம கிரியா அலங்கார பூசனம் சிவஸ்ரீ குமார பிரபாகரக் குருக்கள் மற்றும் ஆலய குரு சக்தி பூஜா துரந்தர்,சிவன் அலங்கார திலகம்,வாமதேவ சிவாச்சாரியார சிவஸ்ரீ ப.கண்ணன் குருக்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.