பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்!

பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்!

பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தினார்.

பட்டலந்த வதை முகாம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது” ‘நல்ல வழியில் தாம் அரசியலை முன்னெடுத்து வந்த வேளை 1983ஆம் ஆண்டு தமது கட்சி தடைசெய்யப்பட்டது எனவும், ஜுலை கலவரத்தை அடிப்படையாகக்கொண்டே தமது கட்சி மீது தடை விதிக்கப்பட்டது என்றும், அன்று ஏற்பட்ட கறுப்பு ஜுலையென்பது இன்றளவிலும் கறுப்பு புள்ளியாகவே இருந்து வருகின்றது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த தடையை நீக்குமாறு ஜனாதிபதி முதல் பலரிடம் தாம் கோரிக்கை விடுத்த போதும் எந்த பலனும் கிட்டவில்லை எனவும், இதற்கிடையில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு தமது உறுப்பினர்களை ஆட்சியில் இருந்தவர்கள் கொன்றொழித்துள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டை நாசமாக்குகின்ற ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டவேளை, நாடு காட்டிக்கொடுக்கப்பட்ட வேளையில்தான் அதற்கு எதிராக 1987 மற்றும் 1989களில் எம்மவர்கள் வீறுகொண்டெழுந்தனர் எனவும்,அவர்கள் கொன்று புதைக்கப்பட்டனர் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறு புதைக்கப்பட்டவர்கள் விதைக்கப்பட்டவர்களாக மீண்டெழுந்திருக்கின்றார்கள் எனவும், உண்மையை ஒருபோதும் மூடிமறைக்க முடியாது எனவும், உண்மைகள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே பட்டலந்த வதை முகாம் கொலையாளிகள், சித்திரைவதை செய்தவர்கள், இதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் வடக்கு மற்றும் மலையக மக்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனவும், அவர்களும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், அவர்களுக்கும் நீதி கிடைக்கப்பட வேண்டும்’ எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.