கைது செய்யப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் செல்ல அனுமதி!

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் செல்ல அனுமதி!

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைதான நாடாளுமன்ற உறுப்பினர் இன்று மாலை (07) கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது, அவரை ஐந்து லட்ச ரூபாய் சரீர பிணையில் செல்வதற்கு நீதவான் அனுமதியளித்துள்ளார்.

இன்று காலை மருதங்கேணி காவல்துறையினரால் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டார்.

காலை 6.30 அளவில் கஜேந்திரகுமாரைக் கைது செய்வதற்காக மருதங்கேணி காவல்துறையினர் அவரது இல்லத்திற்கு சென்றனர்.

இதன்போது குறித்த விடயம் தொடர்பில் சபாநாயகருக்கு அறிவித்ததாகவும் அது தொடர்பில் காவல்துறைமா அதிபருக்கு தாம் அறிவிப்பதாக சபாநாயகர் தம்மிடம் தெரிவித்ததாகவும் கஜேந்திரகுமார் ஊடகங்களிடம் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் மருதங்கேணியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நாளை முற்பகல் 10 மணிக்கு மருதங்கேணி காவல்துறையில் முன்னிலையாகுமாறு நேற்றைய தினம் தமக்கு அறிவிக்கப்பட்டிருந்ததைதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்றில் சிறப்புரிமை பிரச்சினையை முன்வைக்க தாம் திட்டமிட்டிருந்ததாகவும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் அவர் இன்று காலை 8.15 அளவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவர், காவல்துறை வாகனத்தில் சட்டத்தரணி சகிதம் மருதங்கேணி காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார்.

மருதங்கேணிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறப்பட்ட போதும் கஜேந்திரகுமார், கிளிநொச்சி காவல்துறைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு வாக்குமூலம் பெறப்பட்டது.

இதன்போது, கஜேந்திரகுமாரின் கட்சி ஆதரவாளர்கள் கிளிநொச்சி காவல்துறை நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இதன்பின்னர், அவர் கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.