வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் மனநிலையை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினர் புரிந்து கொள்ள வேண்டும் - சார்ள்ஸ் நிர்மலநாதன்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மனநிலையை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினர் புரிந்து கொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க வவுனியா மாவட்ட தலைவி சிவானந்தன் ஜெனிற்றாவின் கைது தொடர்பாக நாடாளுமன்றில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இராணுவத்தினரால் 2007 இல் கடத்திச் செல்லப்பட்டு 16 ஆண்டுகள் கடந்தும் தனது கணவனுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இரண்டு பிள்ளைகளுடன் போராடி வருபவரே சிவானந்தன் ஜெனிற்றா.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராகவும் இருந்த காலத்திலேயே பலரும் காணாமல் ஆக்கப்பட்டார்கள். 

ஏன் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக போராட்டம் செய்கிறார்கள் என சிலர் கேள்வி எழுப்பலாம். 

ஆனால் நாட்டு ஜனாதிபதியிடம் தான் மக்கள் தமக்கானவற்றை கோர முடியும்.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் குறைந்தபட்ச கோரிக்கையாவது அரசாங்கம் நிறைவேற்ற முன்வர வேண்டும்.

நாளைய தினம் சிவானந்தன் ஜெனிற்றாவின் வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் நீதிமன்ற அவமதிப்பு பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. ஆனால், ஜனாதிபதியும் அரசாங்கமும் அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும்"- என்று தெரிவித்தார்.