ஹிருணிகாவின் பிணை மனு தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!

ஹிருணிகாவின் பிணை மனு தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை பிணையில் விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட  கோரிக்கைக்கு ஆட்சேபனை மனு ஒன்று தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (04) கொழும்பு உயர் நீதிமன்றில் அறிவித்தார்.

இந்த பிணை கோரிக்கை இன்று கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

அங்கு, இந்த கோரிக்கை தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க சட்டமா அதிபர் எதிர்பார்ப்பதாக தெரிவித்த அரச தரப்பு சட்டத்தரணி, எழுத்து மூலம் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதை ஒத்திவைக்குமாறும் கோரினார்.

இதன்படி, சட்டமா அதிபருக்கு ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க அனுமதித்த உயர் நீதிமன்ற நீதிபதி, பிணை கோரிக்கையை எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுக்குமாறு உத்தரவிட்டார்.