அதிபர் சேவை நியமனங்களுக்கு எதிரான நீதிப் பேராணை தள்ளுபடி செய்யப்பட்டது.

அதிபர் சேவை தரம் மூன்றில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக புதிய நியமனங்கள் வழங்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது அதனை தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதிபர் சேவை நியமனங்களுக்கு எதிரான நீதிப் பேராணை தள்ளுபடி செய்யப்பட்டது.

குறித்த மனு நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக்க கனேபொல ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது மனுவின் பிரதிவாதிகள் எழுப்பிய அடிப்படை எதிர்ப்பை அடுத்து குறித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிமன்றத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதிபர் சேவை தரம் மூன்றில் நிலவும் வெற்றிடத்துக்கு நியமனம் பெறுவதற்கு தங்களுக்கு தகைமை உள்ளதாக தெரிவித்து இரண்டு அதிபர்களால் குறித்த நீதிப்பேராணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, இலங்கை அதிபர் சேவையின் தரம் மூன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பமாகவுள்ளது.

இதற்கமைய, வட மாகாணத்தில் அதிபர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வானது, யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. 

அத்துடன், இன்றைய தினம், வடமேல் மாகாணத்திற்கான நியமனம் குருநாகலையில் உள்ள வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்திலும், சப்ரகமுவ மாகாணத்திற்கான அதிபர் நியமனம் கலவானை தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்திலும் வழங்கப்படவுள்ளன.
 
அதேநேரம், தென் மாகாணத்திலும், வடமத்திய மாகாணத்திலும், இன்றைய தினம் புதிய அதிபர்களுக்கான நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஊவா மாகாணத்திற்கான அதிபர் நியமனம் வழங்கும் நிகழ்வு பதுளை நூலக கேட்போர் கூடத்தில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

கிழக்கு மாகாணத்திற்கான அதிபர் நியமனம் வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

அத்துடன் மத்திய மாகாணத்திற்கான அதிபர் நியமனம், கண்டி தர்மராஜ வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.