Cyber Crime தீவிரவாத அடிமைகளாக விற்கப்படும் இலங்கை இளைஞர்கள்!

மியான்மரின் - தாய்லாந்து எல்லைப்பகுதியில் தீவிரவாத குழுவினால் நடத்தப்படும் Cyber Crime என்ற இணையக்குற்ற நிலையங்களில் தொடர்ந்தும் 56 இலங்கை இளைஞர்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cyber Crime தீவிரவாத அடிமைகளாக விற்கப்படும் இலங்கை இளைஞர்கள்!

அண்மைய அறிக்கைகளின் படி இந்திய இளைஞர்கள் பலரும் இந்த நிலைக்குள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சீனக்குழு ஒன்றே இந்த தீவிரவாத நிலையத்துக்கான ஆட்சேர்ப்பில் ஈடுபடுவதாக விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய்லாந்தில் இலாபகரமான தகவல் தொழில்நுட்ப வேலைகள் மற்றும் சலுகைகள் என்று கூறி, அழைத்துச்சென்று, மியான்மர் எல்லையைத் தாண்டியதும் இலங்கையர்கள் உட்பட்டவர்கள் தம்மை அறியாமலேயே சைபர் கிரைம் என்ற இணையக்குற்றச் சிறைக்கு விற்கப்படுகிறார்கள்.

சாட்சியங்களின்படி சிறை, இணைய மோசடி பணிகள் மற்றும் வன்முறை என்பன இந்த நிலையங்களில் இடம்பெறுகின்றன.

பொருளாதார நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு முகவர்கள், இந்த மனித மூலதனத்தின் சட்டவிரோத இயக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் உலகெங்கிலும் உள்ள இணைய பயனர்கள் தென்கிழக்கு ஆசியா முழுவதும் செயல்படும் குறித்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர்.

உள்நாட்டு குற்றங்கள் ஒடுக்கப்படுவதை அடுத்து, சீனாவிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்தக் குழுக்கள், மியான்மர், லாவோஸ் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் தமது நிலையங்களை அமைத்துள்ளன.

அதிநவீன இணைய மோசடிகள் மற்றும் நிதி மோசடிகளை மேற்கொள்ள "சைபர் அடிமைகள்" அல்லது இணைய அடிமைகள் எனப்படும் கடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட்டவர்களின் பரந்த வலையமைப்பை இந்த நிலையங்கள் பயன்படுத்துகின்றன.

யுனைடெட் ஸ்டேட்ஸ் இன்ஸ்டிடியூட் ஒஃப் பீஸ் என்ற அமைப்பின் 2023 ஜூன் அறிக்கையின்படி, சீனாவில் இருந்து வெளியேறியவர்களின் குற்றச்செயல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

சீனாவிலிருந்து வெளியேறி, இந்த குற்றக் குழுக்கள் தென்கிழக்கு ஆசியாவில் வளமான நிலத்தைக் கண்டறிந்து, தாய்லாந்தின் எல்லையில் மியான்மரில் புதிதாக கட்டப்பட்ட நகரமான ஸ்வே கொக்கோ (Shwe Kokko) போன்ற பகுதிகளில் புகலிடங்களை நிறுவியுள்ளன.

இந்த நகரம், ஆரம்பத்தில் ஒரு சீன குற்ற வளையத்தால் உருவாக்கப்பட்டது, இப்போது சட்டவிரோத சூதாட்டத்தின் மையமாகவும், பரந்த ஆன்லைன் மோசடி நடவடிக்கைகளுக்கான தளமாகவும் செயற்படுகிறது.

ஆண்கள், பெண்கள் மற்றும் இளம் பருவத்தினர் உட்பட இலட்சக்கணக்கானவர்கள், இந்த நடவடிக்கைகளுக்காக கடத்தப்படுவதாகவும், மனிதாபிமானமற்ற நிலைமைகளின் கீழ் பணிபுரிய நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அவர்களின் கல்வி மற்றும் திறமை இருந்த போதிலும், பாதிக்கப்பட்டவர்கள்  அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள்.

உலகளவில் உள்ளவர்களுக்கு எதிராக குற்றங்களைச் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

அமெரிக்காவின் அறிக்கையும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்தின் ஆகஸ்ட் 2023க்கான அறிக்கையும், இந்தக் குற்றவியல் வலைப்பின்னல்களை அகற்றுவதற்கும், அவற்றில் சிக்கியுள்ள பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கும் ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கையின் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகின்றன.

தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ள மியாவெட்டியில் உள்ள அழகிய விவசாய நிலம் இந்த மோசடி மற்றும் ஏமாற்று செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

"ப்ரோக்கன் டூத்" அதாவது உடைந்த பல் என்ற புனைப்பெயர் கொண்ட வான் குக் கோயின் என்பவரின் அனுசரணையின் கீழ் இந்த பகுதி ஒரு மோசமான சைபர் கிரைம் என்ற இணையக்குற்றப் புகலிடமாக மாற்றப்பட்டதை 2020 இல் நியூயார்க் டைம்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் இலங்கையர்களை இந்த இடத்துக்கு பணிகளுக்கு அனுப்புவதில், துபாயில் இயங்கும் சீனக் குழு ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக இலங்கையின் உள்ளூர் தரப்பினர் சிலர் முகவர்களாக செயற்படுகின்றனர், இலாபகரமான வெளிநாட்டு வேலைகள் என்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் கவர்ந்திழுக்கின்றனர் என்று இலங்கையின் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.