திருக்கேதீஸ்வர நிர்வாகத்தினால் பாதிக்கப்படும் பக்தர்கள்

திருக்கேதீஸ்வர நிர்வாகத்தினால் பாதிக்கப்படும் பக்தர்கள்

வருடா வருடம் மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற தலமான திருக்கேதீஸ்வரத்தில் இடம் பெறும் சிவராத்திரி நிகழ்வுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழமை.

இவ்வாறான நிலையில் ஆண்டு தோறும் சிவராத்திரி நிகழ்வுக்காக திருக்கேதீஸ்வர வளாகத்தில் கடைகள் மற்றும் தரிப்பிடங்கள் குத்தகை மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.

ஆனால் ஆண்டு தோரும் திருகேதீஸ்வர நிர்வாகம் வருமானத்தை நோக்காக கொண்டு தரிப்பிடங்களையும் கடைகளையும் அதிக விலைக்கு குத்தகைக்கு வழங்குவதனால் பொதுமக்கள் பல்வேறு விதமாக பாதிக்கப்படுவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மோட்டார் தரிப்பிட கட்டணங்கள் வழமையாக அதிகமாக காணப்படுகின்ற நிலையில் பலரின் கோரிக்கைக்கு அமைவாக கட்டணத்தை குறைக்குமாறு இம்முறை திருக்கேதீஸ்வர நிர்வாகத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது இருப்பினும் வெறுமனே 50 ரூபா மாத்திரம் குறைத்து 100 ரூபாவாக கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தது

இவ்வாறே முச்சக்கர வண்டி,பஸ் தரிப்பிட கட்டணங்களையும் அதிகளவாக வசூலித்து மக்களை பாதிப்படைய வைக்கும் செயற்பாட்டில் திருக்கேதீஸ்வர நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அதிகமான ஆன்மீக திருத்தலங்களில் இவ்வாறு தரிப்பிடங்களுக்கு கட்டணங்கள் அறவிடப்படுவது இல்லை அவ்வாறு அறவிடும் ஸ்தலங்கள் 20 தொடக்கம் 50 ரூபாவுக்கு உட்பட்ட தொகையையே வசூலிக்கின்றனர்

எனவே இவ்வாறான நிலையில் எதிர் வரும் காலங்களிலாவது ஒரு ஆன்மீக ஸ்தலமாக மக்கள் மீது சுமைகளை சுமத்தி வருமானத்தை இலக்காக கொள்ளாது பக்தர்களுக்காக சேவையாக அர்ப்பணிப்போடு செயற்படுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.