சி.சி.டி.வி கமராக்கள் மூலமாக சாரதிகளுக்கு அபராதம்

கொழும்பு நகரைச் சுற்றி பொலிஸாரால் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், போக்குவரத்து விதிமீறல்களைச் செய்த 4,000க்கும் மேற்பட்ட சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து சம்பந்தப்பட்ட சாரதிகளின் வீடுகளுக்கு அறிவிக்கப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொழும்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறியும் இந்த திட்டம் கடந்த ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி தொடங்கப்பட்டது.
அதன்படி, கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 4,048 சாரதிகளுக்கு எதிராக அபராதம் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தின் கீழ் உரிமை முறையாக மாற்றப்படாத 241 வாகனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
வாகனம் ஒன்றை விற்பனை செய்யும் போது, அதன் உரிமையை மாற்றுவது கட்டாயமாக இருக்க வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இதற்கிடையில், கடந்த ஆண்டில் 724 உயிரிழப்பு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.
அந்த விபத்துகளில் மொத்தம் 764 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை 1,535 கோர விபத்துகளும், 2,699 சிறிய விபத்துகளும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.